Wednesday, May 27, 2015

பர்மா: போதிமரத்தடியில் இன்னொரு பலிபீடம்!


மியான்மார் எனப்படும் பர்மா!

பௌத்தம் கோலோச்சும் இன்னொரு நாடு.

கடந்த மூன்று வருடங்களாக நெஞ்சை பதறவைக்கும் கொலைப்படலம் அரங்கேறிவரும் வன்முறை பூமி. சில வாரங்களாக ஊடகங்களை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கும் இந்த நாட்டின் இனப்படுகொலை செய்திகளும் இரத்தத்தை உறையவைக்கும் படங்களும் சமூக வலைத்தளங்களில் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளன. அண்மையில் அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகளின் செய்தியுடன் ஊடகங்களில் பர்மா என்ற நாமம் சிறிது பரவலாகவே இடம்பிடித்ததுள்ளது என்று கூறலாம்.

அதாவது, பர்மாவிலிருந்து சாவுக்கு அஞ்சி வெளியேறிய பல நூற்றுக்கணக்கான மக்கள் இந்தோனேசியா – ஜாவா தீவுகளுக்கு அருகில் கப்பல்களில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக சிலவாரங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்திருந்தன. அவர்களை இந்தோனேசிய, மலேசிய, தாய்லாந்து நாடுகள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தன.  ஆனால் அதன்பின்னர், இந்த அகதிகள் எவ்வளவு பேர், எங்கு, எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்ற செய்திகள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

அவ்வாறான ஒரு காலப்பகுதியில்தான் - கடந்த வாரம், மலேசியாவிலிருந்து வெளியான பகீர் தகவல் ஒன்று பர்மா இனப்படுகொலை விவகாரத்தின் வேர்களை தேடி ஊடகங்களை விரட்டிவிட்டது.

அதாவது –

பர்மாவிலிருந்து வெளியேறிய பலநூற்றுக்கணக்கான அகதிகள் கொடிய ஆட்கடத்தல்காரர்களில் கைகளில் அகப்பட்டு, வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்டு, மலேசிய – தாய்லாந்து எல்லைப்பகுதிகளில் உள்ள காடுகளில் இரகசிய தடுத்துவைக்கப்பட்டு பணம்பறிக்கப்பட்டபின்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காடுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 இடங்களிலிருந்து பாரிய மனிதப்புதைகுழிகளை கண்டுபிடித்த மலேசிய காவல்துறையினர், இதுவரை சுமார் 140 சடலங்களின் எச்சங்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்கள்.  ஈரக்குலையை நடுங்கவைக்கும் இந்த வதைமுகாம் செய்திகள் இப்போதும்கூட பெரிய ஊடகங்களில் வெளிவர மறுக்கின்றன.



இந்த விதி வழிவந்த பர்மிய மக்களின் பிரச்சினைதான் என்ன?

1962 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட பர்மா, கடந்த 2010 ஆம் ஆண்டுதான் ஜனநாயக வழியிலான தொழிற்சங்க ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி கட்சி என்ற முன்னணியினால் வெற்றிகொள்ளப்பட்டு புதிய ஆட்சி நிறுவப்பட்டது. 48 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற இந்த ஆட்சியினால் நாட்டின் ஒட்டுமொத்த அரசு நிலையிலும் பாரியமாற்றம் ஏற்பட்டது. வெளிநாடுகளுடனான பரந்த உறவுகளும் உருவனது.

புதிய ஆட்சியில்

- பெருந்தொகையான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

- புதிய அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

- அரசுக்கு எதிராக போராடும் கரன்-ஷான் போராளிக்குழுவினருடனான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

- 50 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ விஜயம் பர்மாவுக்கு மேற்கொள்ளப்பட்டது.

- ஐ.நா.செயலாளர் நாயகம் உட்பட பிரித்தானிய பிரதமர் ஆகியோரின் அதிஉயர் விஜயங்களும் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன.

ஆனால், இலங்கையில் ஜே.ஆர் போய் பிரேமதாஸ வந்து, அவருக்கு பின்னர் சந்திரிகா என்று ஆட்சிகள் மாறியவுடன், கதிரைகளுக்கு குஞ்சரம் கட்டி வெளிஉலகுக்கு எவ்வளவுதான் அரிதாரம் பூசினாலும் சிறுபான்மை தமிழர்கள் விடயத்தில் தங்கள் இனவாத கொள்கைகளை அவை ஒருபோதும் மாற்ற முயற்சிக்காதது போல –

பர்மாவிலும் நூறாண்டுகளாக வாழ்ந்துவரும் ரோகிங்க சிறுபான்மை முஸ்லிம் மக்கள் விடயத்தில் பர்மாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த புதிய அரசானது ரோகிங்க மக்களை பொறுத்தவரை மோதகம் போய் கொழுக்கொட்டை வந்த கதைதான்.


ரோகிங்க முஸ்லிம்கள் எனப்படுபவர்கள் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பர்மாவில் வாழ்ந்துவரும் சிறுபான்மை இனத்தவர்கள். இவர்களை நாட்டிலிருந்து துரத்தவேண்டும் என்று காலம் காலமாக பாரிய அளவில் ஆளும் கட்சிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் 1942 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசின் ஆசீர்வாதத்துடனான நடவடிக்கையில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதேபோன்று 1978 ஆம் ஆண்டு இடமபெற்ற இன்னோர் பாரிய மனிதப்படுகொலை படலத்தின்போது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்களாதேஷ_க்கு தப்பிச்சென்றனர். ஆனால், அவர்களில் 60 வீதமானவர்களை மீண்டும் பர்மாவுக்கே துரத்திவிட்டது பங்களாதேஷ் அரசு.

இவ்வாறு காலம் காலமாக பெரும்பான்மை இன அரசாலும் சர்வதேசத்தின் பாராமுகத்தினாலும் பந்தாடப்பட்டுவருவதே ரோகிங்க முஸ்லிம் மக்களின் வழக்கமும் வரலாறும் ஆகிவிட்டது.
இனப்படுகொலை படலம் கட்டவிழ்த்துவிடப்படும்போதெல்லாம் பாலியல் வன்கொடுமை எனப்படுவது பௌத்த ஆதிக்க வெறிபிடித்த காடையர்களாலும் இராணுவத்தினராலும்; தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயுதமாகும்.

இதன்மூலம் அந்த நாட்டில் மிச்சம் சொச்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் வாரிசுகளும் பௌத்தர்களாகவே தோன்றவேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ளும் கறுப்புவரலாறாக இந்த பெருங்கொடூரம் அரங்கேற்றப்பட்டுவந்தது.

1983 ஆம் ஆண்டு பர்மாவில் ஆட்சியிலிருந்த அரசு, சிறுபான்மை இன முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பயங்கரமான இன அழிப்பின் உச்சத்தை வெளிக்காண்பித்திருந்தன.

அதாவது, ரோகிங்க முஸ்லிம் மக்களை அந்த ஆண்டு நடத்திய சனத்தொகை கணக்கெடுப்பில் முற்றாக ஒதுக்கப்பட்டனர்.

இதைவிட படுபயங்கரமான கொடுமைகளும் இந்த மக்களின் அன்றாட வாழ்வில் அரங்கேறின. அதாவது -

- ரோகிங்க முஸ்லிம்கள் பர்மாவில் நிலம் மற்றும் கட்டடங்கள் வாங்கமுடியரது.

- இவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது.

- ரோகிங்கர்கள் எவரும் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. மீறி செய்துகொண்டால் ஐந்து வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை.

- மசூதிகளோ முஸ்லிம் பாடசாலைகளோ தனியாக எங்கும் நிறுவப்படமுடியர்து.

மொத்தத்தில் ரோகிங்க இனத்திற்கு அந்த நாட்டில் எந்த விதமான உரிமையும் இல்லை என்பதே சாராம்சம்.

இப்படிப்பட்ட நரகமயமான சட்டங்களால் ஆளும் பௌத்த வெறியர்கள சமுதாயத்தில் ஒரு நடைபிணமான இனமாகவே ரோகிங்க முஸ்லிம்களை ஆட்சிசெய்துவந்தனர்.

ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றம் நாட்டிலுள்ள மக்களுக்கு பல சுபீட்சங்களை கொண்டு வந்தது. இவற்றில் அதி முக்கியமான மாற்றமாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவி ஆங் சாங்க் சுயி அவர்களின் விடுதலையை குறிப்பிடலாம். பர்மாவின் முகமாக உலக அரங்கில் அறியப்பட்ட அம்மணியின் விடுதலையும் அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணமும் அவ்வளவு தூரம் உலக மக்களால் போற்றி கொண்டாடப்பட்டது.

ஆங் சாங் சுயி இனிமேல் மலரப்போகும் சுபீட்சம் மிக்க பர்மாவின் மீட்பர் என்கிற ரீதியில் உலகமே கொண்டாடியது. ஆனால், இன்றுவரை, ரோகிங்க இன முஸ்லிம் மக்களை இவர்கூட பர்மாவின் தேசிய இனக்குழுமமாகவோ அல்லது பர்மாவில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக எங்கும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த வழமையான அரசியல் சித்து விளையாட்டுக்கள் தொடர்ந்துகொண்டிருந்தபோதுதான், தற்போது உச்சத்தை அடைந்திருக்கும் இரத்தக்களரிக்கு வித்திட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது
கடந்த 2012 ஆம் ஆண்டு பெரும்பான்மையின பௌத்த பெண் ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாள்.

இந்த சம்பவத்தை முஸ்லிம் இனத்தவர்களை சேர்ந்த மூவரே மேற்கொண்டதாக ஆளும் தரப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால், ரோகிங்க இன முஸ்லிம் மதத்தலைவர்களோ தமது இனத்தின்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார்கள். அந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஒருவர் தடுப்புக்காவலில் இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கொலைவாளுடன் திரிந்துகொண்டிருந்த பௌத்த இனவாதப்பேய்களுக்கு கேள்விப்பட்ட சம்பவம், அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாய்ந்துகொள்வதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

அன்று ஆரம்பித்ததுதான் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

பர்மாவின் கொடூர நிலைவரத்துக்கு இன்றுவரை உலக அரங்கில் சரமாரியாக சகல பாகங்களிலிருந்தும் மேற்கொள்ளப்படும் ஒரே ஒரு தடுப்பு நடவடிக்கை என்ன என்று கேட்டால், கண்டன அறிக்கைதான்.

ரோகிங்க இன முஸ்லிம்கள் பர்மாவில் சுமார் 8 லட்சம் பேரும் பங்களாதேஷில் சுமார் 3 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களைவிட மத்திய கிழக்கிலும் ஏனை நாடுகளிலும் சிறிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இவர்களுக்கென பலமான புலம்பெயர்ந்துவாழும் சமூகம் ஒன்றின் பங்களிப்பு இல்லாதது கவலைக்குரிய இன்னொரு விடயமாகும்.

அதனால், ரோகிங்க இன மக்களின் நியாயமான அபிலாஷைகளையும் அவர்களின் உரிமைகளையும் வெளிக்கொண்டுவருவதற்கான வாய்ப்பும் வளமும்கூட அவர்களுக்கு இருக்கவில்லை. அவற்றை வெளிக்கொண்டுவருவதற்கான பொறுப்புள்ளவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பௌத்த இனவெறித்தனத்தின் நேரடித்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருந்தவர்கள் அல்லது சாவின் விளிம்பில் இருந்துகொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள். பங்களாதேஷில் எஞ்சியிருந்தவர்களும் அங்கிருந்து எதையும் செய்துவிட்டால், மீண்டும் பர்மாவுக்கே திருப்பிஅனுப்பக்கூடிய ஆபத்துக்குள் இருந்தவர்கள்.

இதைவிட கொடிய தகவல் ஒன்றுள்ளது.

பர்மாவில் ரோகிங்க இன மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுள்ளமை குறித்து நேரடியாக விசாரிப்பதற்கும் இந்த விடயங்களை கண்காணிப்பதற்கும் ஐ.நாவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட தூதுவர் யார் தெரியுமா?

விஜய் நம்பியார்!

(இது "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்ட கட்டுரைஆகும்) 

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...