Sunday, May 24, 2015

'பாலி 9 : பாகம் 6' : ஆஸ்திரேலியாவின் திமிரை அடக்கிய இந்தோனேஷியா!


ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலான உறவெனப்படுவது வெளிப்பார்வைக்கு நெருக்கமாக செயற்படுவது போன்ற தேரணையை ஏற்படுத்தினும் உள்ளே புகையும் பகையும் அது அவ்வப்போது வெளித்தள்ளிவிடும் சுவாலைகளும் மிகவும் பயங்கரமானவை. கொதிலைமிக்க இந்த உறவுப்பாலத்தின் மீதுதான் இரண்டு நாடுகளும் தங்களது கட்டாய அரசியல் - இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றன.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை –

உலகளாவிய பயங்கரவாதம் எனப்படுவது 25 கோடி மக்கள்தொகைகொண்ட முஸ்லிம் தேசமான இந்தோனேஷிய கதவுகளின் ஊடகத்தான் ஆஸ்திரேலியாவுக்குள் ஊடுருவப்போகிறது என்ற அச்சம் நித்தமும் அரித்தவாறுள்ளமை ஏதோ மறுக்கமுடியாத உண்மை. இன்றையநிலையில்,
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய அச்சம் இதுவாகும். இந்த காரணம் உட்பட அயல்நாடு என்ற அடிப்படையில் நட்பு பாராட்டவேண்டிய பாரம்பரிய கடமை போன்ற பல விடயங்களை முன்வைத்து இந்தோனேஷியாவை தன் கைக்குள் இறுக்கமாக பொத்திவைத்திருக்கவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் 'அரசமைப்பில் எழுதாத பொதுவிதி'

ஆஸ்திரேலியாவின் இந்த ஏக நட்புபாராட்டும் படலத்தை தனக்கு ஏற்றவாறு எங்கெங்கு பயன்டுத்தமுடியுமோ அங்கங்கெல்லாம் அநாயசமாக வாங்கி குவித்துக்கொள்வது இந்தோனேஷியாவின் வழமை. ஆஸ்திரேலியாவின் இந்த பரோபாகாரங்கள் - மானியங்கள், கடன்கள், மீளப்பெறாத நிதி உதவிகள் என்ற பல வடிவங்களில் இந்தோனேஷியாவுக்கு வழங்கப்பட்டுவந்திருக்கின்றன.

இவ்வாறெல்லாம் கொட்டிக்கொடுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு, தனது உத்தியோகப்பற்றற்ற காலனித்துவ தேசமாக இந்தோனேஷியா இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் இந்த சட்டம்பித்தனம் அவ்வப்போது இந்தோனேஷியாவை சீற்றத்தை உள்ளாக்குவதும் அதற்கு ஆஸ்திரேலியா எந்த பதிலும் வழங்காமல் அதிகாரப்போக்குடன் நடந்துகொள்வதும் காலகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஆகும். ஆனால், அகதிகள் விடயம் என்று வரும்போது ஆஸ்திரேலியாவின் இந்த இறுக்கமான போக்கு சற்று தணிந்தே காணப்படுவது வழக்கம்.

ஏனெனில், ஆஸ்திரேலியாவை நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு இந்தோனேஷியாதான் கடைசி இடைசித்தங்கல் தேசமாக இருந்துவருகிறது. இவ்வாறு இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குவியும் அகதிகளால் ஆஸ்திரேலிய அரசு கடந்த சில வருடங்களாக பட்டபாடு பெரும்பாடு. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக இந்தோனேஷியா உட்பட பல நாடுகளுக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் காலில் விழாத குறையாக சட்டவிரோத அகதிகள் வருகையை கட்டுப்படுத்துமாறு கைகூப்பி மன்றாடிவிட்டு வந்தார்.

ஆனால், கடந்த வருடம் இந்த விடயத்தில்கூட ஆஸ்திரேலிய காண்பித்த விட்டேந்தித்தனமான அணுகுமுறை இந்தோனேஷியாவை பயங்கரமாக சீற்றத்துக்குள்ளாக்கியது. அதாவது, “ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை கட்டுப்படுத்தும்படி இந்தோனேஷியாவை கோரியுள்ளோம். அதையும் மீறி, இனி இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் வந்தால், மீண்டும் இந்தோனேஷியாவுக்கே திருப்பி அனுப்புவோம்” என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து, இந்தோனேஷியாவை பொறுத்தவரை வலிய வந்து சண்டைக்கு
இழுத்தது போலவே இருந்தது.

அகதிகள் விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் காலகாலமாக எத்தனையோ உடன்படிக்கைகள், இணக்க வரைவுகள், ஒப்பந்தங்கள் என்று ஒருவித சமரச நிலையை பேணிவந்த பாரம்பரியத்தின் மீது ஆஸ்திரேலியா தடாலடியாக மேற்கொண்ட தாக்குதல் இரு நாட்டு உறவுக்கும் பங்கம் விளைவித்த நிகழ்வாகவே அமைந்தது.

இதேபோன்று, இந்தோனேஷியாவை கடும் சீற்றத்துக்கு உள்ளாக்கி அந்நாட்டு மக்கள் இந்தோனேஷியாவிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் வரை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வழிகோலிய சம்பவம், இந்தோனேஷிய அரச அதிபரின் கைத்தொலைபேசியை ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறையினர் ஒட்டுக்கேட்டதாக ஊடகங்கள் போட்டுடைத்த செய்தி.

இந்த செய்தியால் வெகுண்டெழுந்த இந்தோனேஷியா தங்கள் நாட்டின் இறையாண்மையின் மீது ஆஸ்திரேலியா வன்தாக்குதல் நடத்திவிட்டது என்று உறுமியது. நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொண்ட ஆஸ்திரேலியா, தனது தவறுக்கு மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் கூறியது.

ஆஸ்திரேலியாவோ, பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தோனேஷிய உட்பட தனக்கு அருகில் உள்ள எல்லா நாடுகளினதும் அமைதி நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்கள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த ஒட்டுக்கேட்பு இடம்பெற்றது என்று வியாக்கியானம் கூறி மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது என்று முகத்தில் அறைந்தது போல கூறிவிட்டது.

ஆஸ்திரேலியாவின் இந்த ஏதேட்சதிகாரமான இரட்டைத்தவறு இந்தோனேஷியாவுக்கு அரசியல் - இராஜதந்திர ரீதியாக ஆறாதவடுவை ஏற்படுத்தியது.

இவை எல்லாவற்றினதும் பின்னணியில்தான், பாலி 9 விவகாரம் 2005 ஆம் ஆண்டு முதல் பூதாகாரமாகி பூமராங் போல வந்து ஆஸ்திரேலியாவையே மடக்கிப்பிடித்தது. இம்முறை இந்தோனேஷியாவில் கால்களில் விழவேண்டிய கட்டாய நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது.

மயூரன் மற்றும் அன்ட்ரூவின் மரணதண்டனை எனப்படுவது முற்றிலும் சட்டம் மற்றும் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம். இதில், அரசியல் - இராஜதந்திர தலையீடுகளுக்கு இம்மியும் இடமில்லை. இது தெரிந்தும், இந்த மரணதண்டனை விவகாரத்தில் ஆஸ்திரேலிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டிய இக்கட்டானநிலைக்கு ஆஸ்திரேலிய அரசு தள்ளப்பட்டது. அதுதான் உண்மை. இதற்காக ஆஸ்திரேலிய அரசு இந்தோனேஷிய அரசுடன் பலவிதமான பேரப்பேச்சுக்களில் ஈடுபட்டது.

முதலில் மென்முறையை கடைப்பிடித்த ஆஸ்திரேலிய அரசு, "கடற்கோளால் பாதிக்கப்பட்டபோதெல்லாம் எவ்வளவோ உதவிகளை அள்ளித்தந்தோமே, அதற்கு நன்றிக்கடனாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட எங்கள் நாட்டின் பிரஜைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள்" என்று மன்றாடினார் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்.

அதற்கு இந்தோனேஷியா மசியாத காரணத்தினால், மிதவாத மென்முறைக்கு தன்னை நகர்த்திய ஆஸ்திரேலியா, கைதிகள் பரிமாற்றத்தின் ஊடாக ஏன் இந்த மரணதண்டனையை நிறுத்தக்கூடாது என்று யோசனையை முன்வைத்து "இந்தோனேஷிய கைதிகள் இருவரை நாங்கள் உங்களிடம் தருகிறோம். ஆனால், எங்கள் நாட்டின் பிரஜைகளை நீங்கள் எம்மிடம் தரவேண்டுமில்லை. மரணதண்டனை விதிக்காமல், ஆயுள்கைதிகளாக உங்கள் நாட்டு சிறையிலேயே வைத்திருங்கள்" - என்று கோரிக்கையை முன்வைத்தது.

மறுபேச்சுக்கே இடமில்லாமல், அந்த கோரிக்கையையும் இந்தோனேஷியா நிராகரிக்க வன்முறை மிக்க மிரட்டல் தொனியில் “எங்கள் வேண்டுதல்களை மீறி இந்த மரணதண்டனையை நீங்கள் நிறைவேற்றினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கான உதவிகளை குறைப்போம்” என்றெல்லாம் ஜூலி பிஷப் எச்சரிக்கை விடுத்தும் பார்த்தார்.

ஏதற்கும் அடிபணியாத இந்தோனேஷியா “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று சட்டத்தில் கட்டி சன்னங்களால் சல்லடை போட்ட ஆஸ்திரேலிய பிரஜைகள் இருவரதும் உடலங்களை பெட்டியில் போட்டு அனுப்பிவைத்தது.

ஏதோ பெரிதாக அறச்சீற்றம் கொண்டதுபோல, இந்தோனேஷியாவுக்கான ஆஸ்திரேலிய தூதுவரை மீள அழைத்ததுடன் ஆஸ்திரேலியா தீச்சட்டியை இறக்கிவைத்துவிட்டு, வரவு செலவு திட்ட வேலைகளில் மும்முரமாகிவிட்டது.

பாலி 9 விவகாரத்தில் இந்தோனேஷிய அரசு கொடுத்த தண்டனை மயூரன் மற்றும் அன்ட்ரூவுக்கு மட்டுமல்ல. ஆஸ்திரேலிய அரசுக்கும் சேர்த்துத்தான். இது ஆஸ்திரேலியாவுக்கும் தெரியும். ஆனாலும், இதில் ஆஸ்திரேலிய அரசு பெரிதாக பொங்கி ஆர்ப்பாட்டம் செய்யாதளவுக்கு “ஈரச்சாக்கு போட்டு அடித்தது போல” விஷயத்தை கையாண்டிருப்பதுதான் இந்தோனேஷியாவின் கெட்டித்தனம்.

சட்டமும் நீதியும் நடுநிலமையானவை என்றாலும்கூட அதை உருவாக்கும் அரசுக்கட்டுமானம் எனப்படுவது சூழ்ச்சிகள் நிறைந்த வலைகளால் பின்னப்பட்டுள்ளவரை அந்த நடுநிலமை என்பது கேள்விக்குரியாதாகவே அமையும்.

'பாலி 9: பாகம் 5' - "அண்ணா! உன்னை காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. மன்னித்துவிடு"


'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!



"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...