Thursday, June 4, 2015

மனதில் மகுடிவாசிக்கும் மலையமாருதம்!


கலை உலகின் சாதனை மன்னர்கள் என்றைக்கும் பிரகாசமான நட்சத்திரங்களாக ஒளி வீசிக்கொண்டிருக்கும்போது சில வித்தியாசமான நட்சத்திரங்கள் சாமானிய ரசிகனின் கவனத்தை தனி ஒளிவரிசையில் ஈர்த்துவிடும் தந்திரங்கள் நிறைந்தவையாக காணப்படுவது வழக்கம்.

தமிழ் சினிமாவில் இவ்வாறான தனி சிறப்புடைய நடிகர்கள் பலரை குறிப்பிடலாம். அவர்களில் என்றுமே என் நெஞ்சம் கவர்ந்தவர் நடிகர் ரகுவரன்.

அண்மையில், இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு எனது விருப்பத்துக்குரிய இளையராஜாவின் பாடல்கள் நிறைந்த playlistஐ தட்டிக்கொண்டு போனபோது, விழியில் வழுந்து இதயம் நுழைந்து உயிரை உலுப்பிய பாடல் “தென்றல் என்னை முத்தமிட்டது” கிருஷ்ணசந்தர் - சசிரேகா குரல்களில் ராஜா அசத்திய அற்புதபான பாடல்.

“அன்டனி…மார்க் அன்டனி” என்று கர கர குரலில் மிரட்டிய வில்லன் ரகுவரன், ஒரு காலத்தில் தனது இரண்டாவது படமான “ஒரு ஓடை நதியாகிறது” திரைப்படத்தில் எப்பிடி சிக்கி சின்னாபின்னப்பட்டிருக்கிறார் என்பதை அறிவதற்கு இந்த ஒரு பாடல் போதும். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பாலையாவின் மகள் மனோசித்ராவின் அழகான அபிநயங்கள் பாடல் முழுவதும் பரவிக்கிடக்க, நம்ம ஆள் காதாநாயகியை பிடித்துக்கொண்டு காடு மேடெங்கும் இழுபட்டு படாதபாடு படுகிறார் பாவம். டான்ஸ் என்றால் அண்ணனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அது தெரிந்தும் இந்த பாடலில் அந்த மனுசனை போட்டு படுத்தியிருக்கிறார்கள்.

ரகுவரனைப்பற்றி எழுதுவதற்கு இங்கு எவ்வளவோ விஷயங்கள் கிடந்தாலும் இந்த இடத்தில் தென்றல் வந்து முத்தமிட்ட ராஜாவின் பாடலை பற்றிக்கொண்டு சற்று இசையில் நனைவோம்.

மலையமாருத ராகத்தில் ராஜா இசையமைத்த அற்புதமான பாடல்களில் தரமான பாடல் இதுவென்பேன்.

இந்த பாடல்தான் மலையமாருதத்தில் ராஜா இசையமைத்த முதல் பாடல் என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், 1983 இல் இந்த பாடல் வெளிவருவதற்கு முன்னர் 1978 இல் “நெஞ்சில் ஆடும் பூ ஒன்று” என்ற திரைப்படத்தில் வெளியான பாடல்தான் இந்த ராகத்தில் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் என்று அறியப்படுகிறது. இந்த திரைப்படம் வெளிவரவேயில்லை என்பது வேறுகதை. இந்த திரைப்படத்திலிருந்து “ஒரு மூடன் கதை சொன்னான்” என்ற மலேசியா வாசுதேவன் பாடும் சோகப்பாடல் மிகவும் பிரபலமானது. அந்த பாடலில் வரும் “பெண்ணை படைக்காதே பிரம்மனே. பாவம் ஆண்களே” என்ற உலகப்பிரசித்தபெற்ற வரிகள் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூறப்படவேண்டிய கவிஞனின் வீரத்தை பறை சாற்றக்கூடியவை. (ராஜாவின் சார்பில் அடியேன் சொந்த செலவில் சூனியம் வைத்தாயிற்று)

சரி அதைவிடுவம். அந்த படத்திலருந்து எஸ்.பி.பியும் ஜானகியும் பாடிய “கோடி இன்பம் மேனி எங்கும்” என்ற பாடல்தான் இளையராஜா மலையமாருதம் ராகத்தில் இசையமைத்த முதலாவது பாடல்.

அதற்கு பின்னர், மலையமாருத ராகத்தில் ராஜா அள்ளிக்கொடுத்த  -

தீபன் சக்ரவர்த்திக்கு தமிழ்நாடு தேசிய விருதைப்பெற்றுக்கொடுத்த “பூஜைக்காக வாடும் பூவை” -

“மனிதனின் மறுபக்கம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊமை நெஞ்சின் சொந்தம். இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்” -

“தென்றலே என்னை தொடு” படத்திலிருந்து “கண்மணி நீ வர காத்திருந்தேன்” -

போன்றவை எப்படியான கிறக்கம் பிடித்த பாடல்கள் என்று சொல்லத்தேவையில்லை.

அப்பனுக்கு தப்பாமல் இசையமைப்பாளனாக உருவெடுத்த ராஜாவின் மூத்தமகன் கார்த்திக்ராஜாவும் மலையமாருத ராகத்தை அநாயாசமாக தனது “டும் டும் டும்” படத்தில் பயன்படுத்தியிருந்தார். மாதவனும் ஜோதிகாவும் லவ்வாலே நிறைந்திருந்து பாடும் “இரகசியமாய் இரகசிமாய்” பாடல் மலைய மாருத ராகத்தால் க்ளீன் போல்ட் செய்யப்பட்ட பாடல்.

சமீபத்தில் வெளிவந்த பாடல்களில், இன்றைய மெலடி உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் இமான் “ரம்மி” திரைப்படத்தில் எயார் டெல் சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களான சந்தோஷ் மற்றும் பூஜா குரல்களால் பூஜித்த “எதுக்காக என்னையும் நீயும் பார்த்த” பக்கா மலையமாருத இசையில் வடிக்கப்பட்ட அருமையான இசைக்கோர்வை.

இந்த ராகத்தில் ஒருவித கிறக்கம் இருக்கம். அதை பயன்படுத்தும் எல்லா இசையமைப்பாளர்களும் அதில் வித்தியாசத்தை காண்பிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சி அவர்களது பாடல்களில் தெளிவாக தெரியும்.

கேட்டு ரசியுங்கள்!


"ஒரு ஓடை நதியாகிறது" திரைப்படத்திலிருந்து "தென்றல் என்னை முத்தமிட்டது"


“மனிதனின் மறுபக்கம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊமை நெஞ்சின் சொந்தம்"


“தென்றலே என்னை தொடு” படத்திலிருந்து “கண்மணி நீ வர காத்திருந்தேன்” 


"காதல் ஓவியம்" படத்திலிருந்து “பூஜைக்காக வாடும் பூவை”

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...