Monday, June 1, 2015

சிறிலங்கா – விடுதலைப்புலிகள் - மரண தண்டனை!




புங்குடுதீவு பள்ளி மாணவி படுகொலை சம்பவம் இடம்பெற்ற கையோடு நாட்டில் தண்டனைகளை கடுமையாக்குவதற்கான கோரிக்கைகள் இலங்கையில் பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக, நாட்டில் மீண்டும் மரணதண்டனை முறையை அமுலுக்குக்கொண்டுவரவேண்டும் என்ற யோசனை மூர்க்கமாக முன்மொழியப்பட்டிருக்கிறது. இதனை அரச தரப்பினரும் தாங்கள் பரிசீலப்பதாக ஆங்காங்கே கோடிகாட்டியுள்ளனர்.

குற்றங்;களை முற்றாக ஒழிக்கமுடியாது என்று கருதினாலும் அவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதற்காக தண்டனைகளை கடுமையாக்குவது என்பது உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுகின்ற வழமையான சட்ட மரபு. அந்தவகையில், பாரதூரமான குற்றங்களாக கருதப்படும் கொலை, பாலியல் வன்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதை சில நாடுகள் இன்னமும் பின்பற்றிவருகின்றன. இவற்றைவிட தேசத்துரேகத்துக்கும் சில நாடுகள் மரணதண்டனை வழங்கிவருவது நடைமுறையில் உள்ளது.

ஆனால், இலங்கையில் மரணதண்டனை அமுலுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு செய்வதென்பது திருடர் கூட்டம் ஒன்று கூடி வங்கி திறப்பதற்கு விளம்பரம் செய்வது போன்றதாகும். அது ஏன் என்பதை இங்கு விரிவாக விளக்கவேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், மரணதண்டனை எனப்படுவது இலங்கை அரசினாலும் விடுதலைப்புலிகளாலும் எவ்வாறு கையாளப்பட்டுவந்தது என்பது குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் இந்த பதிவு ஆராயவிருக்கிறது.

இலங்கையில் காலனித்துவ காலத்திலிருந்து மரணதண்டனைமுறை அமுலில் இருந்தபோதும் 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த தண்டனை நிறைவேற்றம் என்பது முற்றாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால், 1999 இலும் 2004 இல் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அம்பேப்பிட்டியவின் படுகொலைக்கு பின்னரும்  மரணதண்டனைமுறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவதற்கு முன்னாள் அரச அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கள கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார்.

இதன்பிரகாரம், மரணதண்டனை நிறைவேற்றப்படுவதுதான் இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, சட்டத்தின் பிரகாரம் மரணதண்டனை தீர்ப்பை நீதிமன்றங்கள் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன. இவ்வாறு மரணதண்டனை வழங்கப்பட்ட சுமார் 450 பேர்வரை தற்போது சிறைகளில் காலவரையறையின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களைவிட, சுமார் 500 பேர் தமக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், திடீரென, மரணதண்டனை கைதிகளை தூக்கில் போடுவதற்கு ஆட்கள் இல்லை எனவும் அந்த வேலைக்காக ஆட்களை எடுப்பதாக சிங்கள பத்திரிகையில் அரசு விளம்பரம் ஒன்று வெளியானது. அவ்வளவுதான், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோருக்கு தூக்கிவாரிப்போட்டது.

சுமார் 178 பேர் இந்தவேலைக்கு விண்ணப்பத்திருந்தார்கள். அவர்களில் ஒரு கண் பார்வையுள்ளவர் ஒருவர்(…சுத்தம்), ஆட்டோ ஓட்டுனர், சிறைச்சாலை உத்தியோகத்தர், பல்கலைக்கழக பட்டதாரி, பல பெண்கள் என ஏகப்பட்ட சுவாரஸ்யமான கூட்டம். தெரிவுப்பரீட்சையில் பலர் நிரகரிக்கப்பட்டாலும் ஒரு பெண் இறுதித்தேர்வு மட்டம்வரை முன்னேறியிருந்தார். ஆனால், அவர் ஒரு பெண் என்ற காரணத்தினால், மரணதண்டனை விதிக்கப்படும் கணத்தில் உணர்ச்சிவசப்படக்கூடும் என்ற அடிப்படையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இருவர் பணிக்கு தெரிவுசெய்யப்பட்டனர்.

அவ்வளவுடன் இலங்கையின் மரணதண்டனை நோக்கிய பயணம் உள்ளது.

எல்லாவற்றுக்கும் சீனாவிடம் போய்நின்ற மகிந்த, உலகத்திலேயே அதிக மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடான சீனாவிடமிருந்து ஏன் இதைமட்டும் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை.

எது எப்படியோ தற்போது மீண்டும் இந்த மரண தண்டனை சொல்லாடல் இலங்கையின் நீதிவட்டாரங்களில் மீண்டும் அடிபடத்தொடங்கியுள்ளது.

தமிழ்மக்களை பொறுத்தவரை அவர்களுக்கு, இலங்கையின் நீதிக்கட்டமைப்புக்களில் கடந்த முப்பது வருட காலத்தில் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. தமிழ்மக்களுக்கு எதிராக சிங்களப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல கொடூரமான குற்றங்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. அவ்வாறு, நீதி வழங்கப்படுவதுபோல இலங்கை நீதிக்கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட ஓரிரு முயற்சிகளும் அரசியல் தலையீடுகளால் நீர்த்துப்போனதுதூன் வரலாறு.

இதில் சுவாரஸியமான விடயம் ஒன்றை இங்கு குறிப்பிடவேண்டுமானால், பொதுமக்களுக்கு குண்டு வைத்தார்கள், அதை செய்தார்கள் - இதைச்செய்தார்கள் என்று முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலருக்கு தங்களது நீதிமன்றங்களில் மரண தண்டனை தீர்ப்பெழுதிய சிறிலங்கா அரசு –

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கவில்லை. 200 வருட சிறை தண்டனை வழங்குவதாகத்தான் தீர்ப்பெழுதியது. இந்த வழக்கு குறித்து அப்போது, விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, சிரித்துவிட்டு, “சிறிலங்கா நீதிமன்றம் செய்வதைப்போல, எமது மக்களுக் எதிரான கொடுமைகளை புரிந்த சிறிலங்கா அமைச்சர்களுக்கும் இராணுவ தளபதிகளுக்கும் எதிராக நாங்களும் தமிழீழ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டால், இதைவிட பல சுவாரஸியமான தீர்ப்புக்களை காணலாம்” – என்றார்.

இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகள் கட்டமைத்த நீதிபிரபாலனசபையானது அவர்களது நிழல் அரசில் எவ்வாறான காத்திரத்தை பேணியிருந்தது என்ற விடயத்தை ஆழமாக நோக்குவது முக்கியமாகிறது. இது குறித்து, அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களே ஒரு காலத்தில் வியந்து பாராட்டியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் சட்டம், நீதிநிர்வாகம் என்பது 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியுடன் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறுகிறது.

இந்த நீதிக்கட்டமைப்புக்கள் தோற்றுவாய் பெறும் முன்னரே, தண்டனை முறைமைகளில் கடுமையான போக்கினை கடைப்பிடித்து - ஒரு போராளிக்குழு என்ற போர்வையில் - மக்கள் நிர்வாகத்தை நடத்திவந்த விடுதலைப்புலிகள், 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர், மக்கள் அரசாக தங்களை தகவமைத்துக்கொள்ளும் படிமுறையின் ஒரு அங்கமாக நீதிக்கட்டமைப்புக்களின் உருவாக்கத்தை உள்வாங்கிக்கொள்கிறார்கள்.

இந்த நீதிக்கட்டமைப்பின் வளர்ச்சிநிலைக்கான பாதையில் அதன் வெளிநிலை ஆலோசகராக மிகப்பெரியளவில் பங்களித்தவர்களில் ஒருவர், தற்போது புங்குடுதீவு சம்பவ சிக்கலில் மாட்டியிருக்கும் வி.ரி.தமிழ்மாறன் அவர்கள்.

மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட தமிழீழ நீதி நிர்வாகத்துறையின் கீழ், தமிழீழ குடியரசுக்கான அனைத்து சட்டங்களும், தண்டனைகளும், நிவாரணங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு தமிழீழ சட்டக்கோவை என்ற ஆவணம் வெளியிடப்பட்டது.

இந்த ஆவணத்தில், பொதுமக்களுக்கான குற்றவியல் மற்றும் குடியியல் வழக்குகளுக்கான வசதிகளும் நீதிமன்ற உதவிகளும் வழங்கப்பட்டிருந்தன. இவற்றின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் விசாரணைகளும் தீர்ப்புக்களும் வழங்கப்பட்டன.

தற்போது, புங்குடுதீவு சம்பவம் இடம்பெற்றவுடன் “விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா” என்று எல்லோரும் தமக்குள் புறுபுறுத்துக்கொள்வதற்கு காரணம் என்ன என்பதை அறிவதற்கு, தமிழீழ சட்டக்கோவையின் - “தமிழீழ குற்றப்பொறுப்புக்களும் தண்டனைகளும்” என்ற சரத்தின் கீழ் பாலியல் வன்புணர்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றுக்கான தீர்ப்புக்களை நோக்குவது பொருத்தமாக இருக்கும்.





நான் கடந்தவாரம் எழுதிய பத்தி ஒன்றில் குறிப்பிட்டதை இங்கு மீளுரைக்க விரும்புகிறேன். அதாவது, சட்டமும் நீதியும் நடுநிலமையானது என்றாலும்கூட அதனை உருவாக்கும் அரசுக்கட்டுமானம் சூழ்ச்சிகள் நிறைந்த வலைகளினால் பின்னப்பட்டுள்ள வரை, அந்த நடுநிலைமை கேள்விக்குரியதாகவே அமையும்.

விடுதலைப்புலிகளின் ஆட்சியில், இது தலைகீழாக இருந்தது. அகவே மக்களுக்கு சட்டத்தின் மீது ஒரு நம்பிக்கையும் அதேநேரம் ஒரு தண்டனைகளின் மீது மாறாத அச்சத்தையும் தக்கவைத்திருந்தது.

குற்றங்களுக்கு அருகிலேயே அபாய சங்காக ஒலித்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் தண்டனைகள் தற்போது அடங்கிப்போனதால் ஏற்பட்ட வெற்றிடம், குற்றவாளிகளுக்கு ஏகபோக சுதந்திரத்தை அள்ளி வழங்கியிருக்கிறது.

கட்டுப்பாட்டுடன் இருந்த மக்களுக்கு கிடைத்திருக்கும் தடையில்லா வளங்கள் பல வடிவங்களில் தாயகத்திற்குள் கால்வைத்திருக்கின்றன. இதனை கட்டுப்படுத்தவதற்கு பயனாளர்களும் தயாரில்லை. வழங்குனர்களுக்கு தேவையுமில்லை. இந்த ஒரு புள்ளியின் ஊடாக வெளித்தெறிக்கும் குற்றங்களின் விளைவுகளைத்தான் பொதுமக்கள் அனுபவித்துவருகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்சிக்குப்பின்னர், தாயகத்திற்குள் கட்டுடைத்து பாய்ந்திருக்கும் புதிய வடிவத்திலான வாழ்வியல்முறை என்பது தெளிந்த நிலைக்கு வந்தபின்னர் தண்டனை முறைகளை குறைத்துக்கொள்வது பற்றி பரிசீலுனை செய்யலாம். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், அங்குள்ள நிலைவரத்தை கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்கு தண்டனைகளை இறுக்கிக்கொள்வது அவசியமாகிறது. இது பாகுபாடின்றி எல்லோருக்கும் பயனாக அமையும் என்பது இந்த பதிவின் நம்பிக்கை.

(இது "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை ஆகும்) 

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...