Wednesday, May 27, 2015

பர்மா: போதிமரத்தடியில் இன்னொரு பலிபீடம்!


மியான்மார் எனப்படும் பர்மா!

பௌத்தம் கோலோச்சும் இன்னொரு நாடு.

கடந்த மூன்று வருடங்களாக நெஞ்சை பதறவைக்கும் கொலைப்படலம் அரங்கேறிவரும் வன்முறை பூமி. சில வாரங்களாக ஊடகங்களை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கும் இந்த நாட்டின் இனப்படுகொலை செய்திகளும் இரத்தத்தை உறையவைக்கும் படங்களும் சமூக வலைத்தளங்களில் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளன. அண்மையில் அங்கிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகளின் செய்தியுடன் ஊடகங்களில் பர்மா என்ற நாமம் சிறிது பரவலாகவே இடம்பிடித்ததுள்ளது என்று கூறலாம்.

அதாவது, பர்மாவிலிருந்து சாவுக்கு அஞ்சி வெளியேறிய பல நூற்றுக்கணக்கான மக்கள் இந்தோனேசியா – ஜாவா தீவுகளுக்கு அருகில் கப்பல்களில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக சிலவாரங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்திருந்தன. அவர்களை இந்தோனேசிய, மலேசிய, தாய்லாந்து நாடுகள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தன.  ஆனால் அதன்பின்னர், இந்த அகதிகள் எவ்வளவு பேர், எங்கு, எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்ற செய்திகள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.

அவ்வாறான ஒரு காலப்பகுதியில்தான் - கடந்த வாரம், மலேசியாவிலிருந்து வெளியான பகீர் தகவல் ஒன்று பர்மா இனப்படுகொலை விவகாரத்தின் வேர்களை தேடி ஊடகங்களை விரட்டிவிட்டது.

அதாவது –

பர்மாவிலிருந்து வெளியேறிய பலநூற்றுக்கணக்கான அகதிகள் கொடிய ஆட்கடத்தல்காரர்களில் கைகளில் அகப்பட்டு, வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்டு, மலேசிய – தாய்லாந்து எல்லைப்பகுதிகளில் உள்ள காடுகளில் இரகசிய தடுத்துவைக்கப்பட்டு பணம்பறிக்கப்பட்டபின்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காடுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 இடங்களிலிருந்து பாரிய மனிதப்புதைகுழிகளை கண்டுபிடித்த மலேசிய காவல்துறையினர், இதுவரை சுமார் 140 சடலங்களின் எச்சங்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்கள்.  ஈரக்குலையை நடுங்கவைக்கும் இந்த வதைமுகாம் செய்திகள் இப்போதும்கூட பெரிய ஊடகங்களில் வெளிவர மறுக்கின்றன.



இந்த விதி வழிவந்த பர்மிய மக்களின் பிரச்சினைதான் என்ன?

1962 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட பர்மா, கடந்த 2010 ஆம் ஆண்டுதான் ஜனநாயக வழியிலான தொழிற்சங்க ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி கட்சி என்ற முன்னணியினால் வெற்றிகொள்ளப்பட்டு புதிய ஆட்சி நிறுவப்பட்டது. 48 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற இந்த ஆட்சியினால் நாட்டின் ஒட்டுமொத்த அரசு நிலையிலும் பாரியமாற்றம் ஏற்பட்டது. வெளிநாடுகளுடனான பரந்த உறவுகளும் உருவனது.

புதிய ஆட்சியில்

- பெருந்தொகையான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

- புதிய அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

- அரசுக்கு எதிராக போராடும் கரன்-ஷான் போராளிக்குழுவினருடனான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

- 50 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க அதிகாரி ஒருவரின் உத்தியோகபூர்வ விஜயம் பர்மாவுக்கு மேற்கொள்ளப்பட்டது.

- ஐ.நா.செயலாளர் நாயகம் உட்பட பிரித்தானிய பிரதமர் ஆகியோரின் அதிஉயர் விஜயங்களும் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன.

ஆனால், இலங்கையில் ஜே.ஆர் போய் பிரேமதாஸ வந்து, அவருக்கு பின்னர் சந்திரிகா என்று ஆட்சிகள் மாறியவுடன், கதிரைகளுக்கு குஞ்சரம் கட்டி வெளிஉலகுக்கு எவ்வளவுதான் அரிதாரம் பூசினாலும் சிறுபான்மை தமிழர்கள் விடயத்தில் தங்கள் இனவாத கொள்கைகளை அவை ஒருபோதும் மாற்ற முயற்சிக்காதது போல –

பர்மாவிலும் நூறாண்டுகளாக வாழ்ந்துவரும் ரோகிங்க சிறுபான்மை முஸ்லிம் மக்கள் விடயத்தில் பர்மாவின் ஆளும் வர்க்கம் கொண்டிருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த புதிய அரசானது ரோகிங்க மக்களை பொறுத்தவரை மோதகம் போய் கொழுக்கொட்டை வந்த கதைதான்.


ரோகிங்க முஸ்லிம்கள் எனப்படுபவர்கள் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பர்மாவில் வாழ்ந்துவரும் சிறுபான்மை இனத்தவர்கள். இவர்களை நாட்டிலிருந்து துரத்தவேண்டும் என்று காலம் காலமாக பாரிய அளவில் ஆளும் கட்சிகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் 1942 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசின் ஆசீர்வாதத்துடனான நடவடிக்கையில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதேபோன்று 1978 ஆம் ஆண்டு இடமபெற்ற இன்னோர் பாரிய மனிதப்படுகொலை படலத்தின்போது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்களாதேஷ_க்கு தப்பிச்சென்றனர். ஆனால், அவர்களில் 60 வீதமானவர்களை மீண்டும் பர்மாவுக்கே துரத்திவிட்டது பங்களாதேஷ் அரசு.

இவ்வாறு காலம் காலமாக பெரும்பான்மை இன அரசாலும் சர்வதேசத்தின் பாராமுகத்தினாலும் பந்தாடப்பட்டுவருவதே ரோகிங்க முஸ்லிம் மக்களின் வழக்கமும் வரலாறும் ஆகிவிட்டது.
இனப்படுகொலை படலம் கட்டவிழ்த்துவிடப்படும்போதெல்லாம் பாலியல் வன்கொடுமை எனப்படுவது பௌத்த ஆதிக்க வெறிபிடித்த காடையர்களாலும் இராணுவத்தினராலும்; தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயுதமாகும்.

இதன்மூலம் அந்த நாட்டில் மிச்சம் சொச்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் வாரிசுகளும் பௌத்தர்களாகவே தோன்றவேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ளும் கறுப்புவரலாறாக இந்த பெருங்கொடூரம் அரங்கேற்றப்பட்டுவந்தது.

1983 ஆம் ஆண்டு பர்மாவில் ஆட்சியிலிருந்த அரசு, சிறுபான்மை இன முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப்பயங்கரமான இன அழிப்பின் உச்சத்தை வெளிக்காண்பித்திருந்தன.

அதாவது, ரோகிங்க முஸ்லிம் மக்களை அந்த ஆண்டு நடத்திய சனத்தொகை கணக்கெடுப்பில் முற்றாக ஒதுக்கப்பட்டனர்.

இதைவிட படுபயங்கரமான கொடுமைகளும் இந்த மக்களின் அன்றாட வாழ்வில் அரங்கேறின. அதாவது -

- ரோகிங்க முஸ்லிம்கள் பர்மாவில் நிலம் மற்றும் கட்டடங்கள் வாங்கமுடியரது.

- இவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது.

- ரோகிங்கர்கள் எவரும் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. மீறி செய்துகொண்டால் ஐந்து வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனை.

- மசூதிகளோ முஸ்லிம் பாடசாலைகளோ தனியாக எங்கும் நிறுவப்படமுடியர்து.

மொத்தத்தில் ரோகிங்க இனத்திற்கு அந்த நாட்டில் எந்த விதமான உரிமையும் இல்லை என்பதே சாராம்சம்.

இப்படிப்பட்ட நரகமயமான சட்டங்களால் ஆளும் பௌத்த வெறியர்கள சமுதாயத்தில் ஒரு நடைபிணமான இனமாகவே ரோகிங்க முஸ்லிம்களை ஆட்சிசெய்துவந்தனர்.

ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றம் நாட்டிலுள்ள மக்களுக்கு பல சுபீட்சங்களை கொண்டு வந்தது. இவற்றில் அதி முக்கியமான மாற்றமாக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவி ஆங் சாங்க் சுயி அவர்களின் விடுதலையை குறிப்பிடலாம். பர்மாவின் முகமாக உலக அரங்கில் அறியப்பட்ட அம்மணியின் விடுதலையும் அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணமும் அவ்வளவு தூரம் உலக மக்களால் போற்றி கொண்டாடப்பட்டது.

ஆங் சாங் சுயி இனிமேல் மலரப்போகும் சுபீட்சம் மிக்க பர்மாவின் மீட்பர் என்கிற ரீதியில் உலகமே கொண்டாடியது. ஆனால், இன்றுவரை, ரோகிங்க இன முஸ்லிம் மக்களை இவர்கூட பர்மாவின் தேசிய இனக்குழுமமாகவோ அல்லது பர்மாவில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக எங்கும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த வழமையான அரசியல் சித்து விளையாட்டுக்கள் தொடர்ந்துகொண்டிருந்தபோதுதான், தற்போது உச்சத்தை அடைந்திருக்கும் இரத்தக்களரிக்கு வித்திட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது
கடந்த 2012 ஆம் ஆண்டு பெரும்பான்மையின பௌத்த பெண் ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாள்.

இந்த சம்பவத்தை முஸ்லிம் இனத்தவர்களை சேர்ந்த மூவரே மேற்கொண்டதாக ஆளும் தரப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால், ரோகிங்க இன முஸ்லிம் மதத்தலைவர்களோ தமது இனத்தின்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார்கள். அந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஒருவர் தடுப்புக்காவலில் இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கொலைவாளுடன் திரிந்துகொண்டிருந்த பௌத்த இனவாதப்பேய்களுக்கு கேள்விப்பட்ட சம்பவம், அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாய்ந்துகொள்வதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

அன்று ஆரம்பித்ததுதான் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

பர்மாவின் கொடூர நிலைவரத்துக்கு இன்றுவரை உலக அரங்கில் சரமாரியாக சகல பாகங்களிலிருந்தும் மேற்கொள்ளப்படும் ஒரே ஒரு தடுப்பு நடவடிக்கை என்ன என்று கேட்டால், கண்டன அறிக்கைதான்.

ரோகிங்க இன முஸ்லிம்கள் பர்மாவில் சுமார் 8 லட்சம் பேரும் பங்களாதேஷில் சுமார் 3 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களைவிட மத்திய கிழக்கிலும் ஏனை நாடுகளிலும் சிறிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இவர்களுக்கென பலமான புலம்பெயர்ந்துவாழும் சமூகம் ஒன்றின் பங்களிப்பு இல்லாதது கவலைக்குரிய இன்னொரு விடயமாகும்.

அதனால், ரோகிங்க இன மக்களின் நியாயமான அபிலாஷைகளையும் அவர்களின் உரிமைகளையும் வெளிக்கொண்டுவருவதற்கான வாய்ப்பும் வளமும்கூட அவர்களுக்கு இருக்கவில்லை. அவற்றை வெளிக்கொண்டுவருவதற்கான பொறுப்புள்ளவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பௌத்த இனவெறித்தனத்தின் நேரடித்தாக்குதலை சந்தித்துக்கொண்டிருந்தவர்கள் அல்லது சாவின் விளிம்பில் இருந்துகொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள். பங்களாதேஷில் எஞ்சியிருந்தவர்களும் அங்கிருந்து எதையும் செய்துவிட்டால், மீண்டும் பர்மாவுக்கே திருப்பிஅனுப்பக்கூடிய ஆபத்துக்குள் இருந்தவர்கள்.

இதைவிட கொடிய தகவல் ஒன்றுள்ளது.

பர்மாவில் ரோகிங்க இன மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுள்ளமை குறித்து நேரடியாக விசாரிப்பதற்கும் இந்த விடயங்களை கண்காணிப்பதற்கும் ஐ.நாவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட தூதுவர் யார் தெரியுமா?

விஜய் நம்பியார்!

(இது "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்ட கட்டுரைஆகும்) 

Monday, May 25, 2015

வித்தியா – மயூரன் சந்திப்பு: நடந்தது என்ன?


வெறித்த கண்களுடன் அழுவதற்கும் ஆற்றலின்றி வந்திறங்கிய வித்தியாவை எங்கிருந்தோ அடையாளம் கண்டு ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் சரண்யா. என்ன நடந்தது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டவள், வித்தியாவை இறுக்கக்கட்டியணைத்துக்கொண்டு ஓவென்று அழுதாள். நாள் முழுதும் உடம்பெல்லாம் அனலாய் கொதித்துக்கொண்டிருந்த வித்தியாவுக்கு சரண்யாவின் அணைப்புத்தான் சிறிது ஆறுதலை கொடுத்தாலும் வந்திறங்கிய புதிய இடம்; பற்றி எதுவும் புரியாமல் சரண்யாவின் பிடியிலிருந்தபடியே சுற்று முற்றும் பார்த்து வழிகளை அலையவிட்டாள்.

எல்லாமே புதிதாய் கிடந்தது. சில முகங்கள் எங்கோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தியது. சிலரின் பார்வையில் கருணை தெரிந்தது. சிலரின் பார்வைகள், அங்கு வருவதற்கு முன் சற்று முன் பார்த்த கொடிய முகங்கள் போலவே காணப்பட்டன. சில சின்னஞ்சிறுசுகள் எதுவும் புரியாதவர்களாக வித்தியாவையும் சரண்யாவையும் அழுவுதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தன.

சரண்யாவின் கண்ணீரை துடைத்துவிட்டு கைகளை கோர்த்தபடி மெல்ல மெல்ல நடந்தாள் வித்தியா. சரண்யா ஓடி வந்த திசையில் ஆயிரக்கான மக்கள் கூட்டம் ஒன்று வித்தியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். அவர்களின் கண்களில் ஏதோ ஒரு தவிப்பு வழிந்தபடி கிடந்தது.

பயப்படாதே! இவர்கள் எல்லோரும் எனக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு முன் இங்கு வந்தவர்கள்” – என்று கூறிய சரண்யாவை வித்தியா ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க “ம்..எல்லாரும் எங்கட சனம்தான்” – என்றாள் சரண்யா.

அப்போது திடீரென ஏதோ புது தைரியம் வந்ததுபோல் உணர்ந்தாள் வித்தியா. இருந்தாலும் உடல் கொதித்தபடி கிடந்தது.

திரும்பி நேரே பார்த்தவள், தொலைதூரத்தில் ஒரு கொட்டகையில் எவரையும் திரும்பிப்பார்க்காமல் பெரிய பரந்த பலகை ஒன்றில் வர்ணங்களின் உதவியுடன் சித்திரம் வரைந்துகொண்டிருந்த இளைஞன் ஒருவனை கண்டாள். அவனின் தோற்றத்தில் தமிழன்தான என்பது தெரிந்தாலும், சின்ன சந்தேகமும் கூடவே அவனில் ஒட்டியிருந்தது.

யார் இந்த பெடியன்” என்று சரண்யாவின் காதுக்குள் மெதுவாக கேட்டாள் வித்தியா.

இவன்தான் மயூரன். போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அண்மையில் இந்தோனேஸியாவில் மரண தண்டனை கொடுக்கப்பட்டு போன மாதம் இங்கு வந்தவன்” என்றாள் சரண்யா.

சொல்லி முடிப்பதற்குள் கண்கள் சிவந்து உரு வந்தவள் போலாளாள் வித்தியா. நடப்பதற்கு உடம்பில் வலுவில்லாதபோதும் இயலுமானவரை வேகமாக அந்த கொட்டகையை நோக்கி நடந்தாள் வித்தியா. “எங்கடி போறா” என்று சரண்யா கூப்பிடிட்டது அவளின் காதுகளில் விளவேயில்லை. அவ்வளவு கோபத்துடன் நடந்தாள் வித்தியா.

நீயா மயூரன்

சற்றும் எதிர்பாராத கேள்வி என்றாலும் அமைதியாக திரும்பி பார்த்த மயூரன், தலையை மேலும் கீழும் அசைத்து “ஆம்” என்றான்.

சிறிது நேரத்திற்கு முன் தன்னை தலையில் அடித்து கொலைசெய்தவனை பார்த்தது போலவே பயங்கர சீற்றமடைந்த வித்தியா –

உன்னை போல ஓருத்தன் கடத்திய போதைப்பொருளினால் நாசமாகிப்போக நான்கு மிருகங்களினால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். அது தெரியுமா உனக்கு” என்றாள் வித்தியா.

மை காய்ந்த தூரிகையை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு எழுந்தான் மயூரன். வித்தியாவின் பின்னால் அவளை அழைத்தபடி ஓடிவந்த சரண்யா, வித்தியாவின் கைகளை பிடித்து இழுத்தாள்.

கைகளை உதறிவிட்டு தனது உக்கிரப்பார்வையால் மயூரனை சுட்டெரிப்பது போல பார்த்தாள் வித்தியா.

உன்னைப்போல கழிசடைகள் செய்யும் காரியத்தால் எத்தனை பெண்கள், எத்தனை குடும்பங்கள் சீரழியுது தெரியுமா? இந்த கறுமத்தை உனக்கு விரும்பமெண்டால் நீ புகைச்சு இங்க வந்திருக்கலாமே. ஏன்டா மற்றவங்களுக்கு கடத்தி மற்றவங்களை மிருகமாக்குறீங்கள்” – என்று வாய்க்கு வந்தபடி பொரிந்துதள்ளினாள் வித்தியா.

அவள் திட்டடியதிலிருந்து ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொண்ட மயூரன், பதில் எதுவும் சொல்லாமல், பதில் எதுவும் தெரியாமல், குற்ற உணர்வில் கூனிக்குறுகி நின்றான்.

மெல்லிய குரலில், “நான் செய்தது குற்றம்தான். அதற்காக பத்துவருடங்கள் சிறையிலிருந்து என் குற்றங்களை உணர்ந்து வருந்தி திருந்திவிட்டேன். இருந்தாலும் எனக்கு மரண தண்டனை விதித்ததை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டு இங்கு வந்தேன்” – என்றான் மயூரன்.

அவனது ஒப்புதல் வாக்குமூலம் வித்தியாவை திருப்திப்படுத்தவில்லை.;

பின்னாலிருந்து அவளது கைகளை பிடித்து இழுத்த சரண்யா “வித்தியா! அவனை விட்டுவிடடி. அவன் மிகவும் நல்லவன். அவன் உண்மையில் இங்கு வந்திருக்கக்கூடாது. செய்த குற்றத்துக்காக பத்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தான். அவன் சிறையிலிருந்த காலத்தில், நன்றாக திருந்திவிட்டான். அவனுக்கு பிறகு சிறைக்கு வந்த கைதிகளை நல்லவர்களாக மனம் மாற்றி அவன்  விடுதலையாகும்போது நல்ல மனிதர்களாக வெளியில் செல்ல காரணமாயிருந்தவன் என்றுகேள்விப்பட்டிருக்கறன்” – என்று சொல்லி முடிப்பதற்குள் -

நிப்பாட்டடி உந்த கதையை” – என்றாள் வித்தியா.

நீ இப்ப என்னடி செல்ல வாறாய். என்னை சீரழித்த காட்டுமிராண்டிகளும் பத்து வருசம் ஜெயில்ல கிடந்து, பிழைய உணர்ந்திட்டம், இப்ப திருந்தீட்டம் எண்டு சொன்னா, செய்த பிழையெல்லாத்தையும் மறந்து மன்னிச்சிடுவியா. உன்ன சீரழிச்சவங்கள பற்றி நீயும் நினைச்சுப்பாத்து சொல்லு பார்ப்பம்” என்று சுளீர் என்று கேட்டாள்.

வித்தியாவும் சரண்யாவுக்கும் பேசிக்கொண்டுபோவது மயூரனுக்கு நன்றாகவே கேட்டது. வரைதலை அப்படியே இடையில் நிறுத்திவிட்டு அந்த இடத்திலிருந்து போய்விட்டான்.

தவறுகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் தவறுகள் இடம்பெற்ற காலத்துக்கு சமாந்தரமாகவே கொடுக்கப்படவேண்டுமே தவிர, பத்து வருடம் கழித்து இருபது வருடம் கழித்து தவறிழைத்தவர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு வழங்கப்படக்கூடாது. 

“தலைவர் மாமா இருக்கும்போது எப்பிடியெல்லாம், எங்கட அக்காமார் பாதுகாப்பா இருந்தார்கள் எண்டு அம்மா எனக்கு நெடுகலும் சொல்லுவா. இப்படி எத்தினையோ கதையள் அம்மா சொல்லுவா. நாங்கள் அதை அனுபவிக்கவிலையடி. வயது வந்து எங்களுக்கு விசயங்கள் தெரியுற நேரம் பார்த்து, காடையர்களத்தான் நாங்கள் பார்க்கவேண்டி வந்திட்டுது.

நாங்கள் பரவாயில்லை இங்க வந்திட்டம். அங்க இருக்கிற சனம் பாவமடி” – என்று ஆதங்கத்துடன் சொல்லிக்கொண்டே நடந்தாள் வித்தியா.

அவள் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டே வந்த சரண்யா –

கவலைப்படாதே. மாமா எங்களுடன்தான் இருக்கிறார்” என்று தீர்க்கமாக சொல்லிட்டு வித்தியாவின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு நடந்தாள்.

(முற்றும்)

Sunday, May 24, 2015

'பாலி 9 : பாகம் 6' : ஆஸ்திரேலியாவின் திமிரை அடக்கிய இந்தோனேஷியா!


ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையிலான உறவெனப்படுவது வெளிப்பார்வைக்கு நெருக்கமாக செயற்படுவது போன்ற தேரணையை ஏற்படுத்தினும் உள்ளே புகையும் பகையும் அது அவ்வப்போது வெளித்தள்ளிவிடும் சுவாலைகளும் மிகவும் பயங்கரமானவை. கொதிலைமிக்க இந்த உறவுப்பாலத்தின் மீதுதான் இரண்டு நாடுகளும் தங்களது கட்டாய அரசியல் - இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றன.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை –

உலகளாவிய பயங்கரவாதம் எனப்படுவது 25 கோடி மக்கள்தொகைகொண்ட முஸ்லிம் தேசமான இந்தோனேஷிய கதவுகளின் ஊடகத்தான் ஆஸ்திரேலியாவுக்குள் ஊடுருவப்போகிறது என்ற அச்சம் நித்தமும் அரித்தவாறுள்ளமை ஏதோ மறுக்கமுடியாத உண்மை. இன்றையநிலையில்,
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய அச்சம் இதுவாகும். இந்த காரணம் உட்பட அயல்நாடு என்ற அடிப்படையில் நட்பு பாராட்டவேண்டிய பாரம்பரிய கடமை போன்ற பல விடயங்களை முன்வைத்து இந்தோனேஷியாவை தன் கைக்குள் இறுக்கமாக பொத்திவைத்திருக்கவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் 'அரசமைப்பில் எழுதாத பொதுவிதி'

ஆஸ்திரேலியாவின் இந்த ஏக நட்புபாராட்டும் படலத்தை தனக்கு ஏற்றவாறு எங்கெங்கு பயன்டுத்தமுடியுமோ அங்கங்கெல்லாம் அநாயசமாக வாங்கி குவித்துக்கொள்வது இந்தோனேஷியாவின் வழமை. ஆஸ்திரேலியாவின் இந்த பரோபாகாரங்கள் - மானியங்கள், கடன்கள், மீளப்பெறாத நிதி உதவிகள் என்ற பல வடிவங்களில் இந்தோனேஷியாவுக்கு வழங்கப்பட்டுவந்திருக்கின்றன.

இவ்வாறெல்லாம் கொட்டிக்கொடுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு, தனது உத்தியோகப்பற்றற்ற காலனித்துவ தேசமாக இந்தோனேஷியா இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் இந்த சட்டம்பித்தனம் அவ்வப்போது இந்தோனேஷியாவை சீற்றத்தை உள்ளாக்குவதும் அதற்கு ஆஸ்திரேலியா எந்த பதிலும் வழங்காமல் அதிகாரப்போக்குடன் நடந்துகொள்வதும் காலகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஆகும். ஆனால், அகதிகள் விடயம் என்று வரும்போது ஆஸ்திரேலியாவின் இந்த இறுக்கமான போக்கு சற்று தணிந்தே காணப்படுவது வழக்கம்.

ஏனெனில், ஆஸ்திரேலியாவை நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு இந்தோனேஷியாதான் கடைசி இடைசித்தங்கல் தேசமாக இருந்துவருகிறது. இவ்வாறு இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குவியும் அகதிகளால் ஆஸ்திரேலிய அரசு கடந்த சில வருடங்களாக பட்டபாடு பெரும்பாடு. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக இந்தோனேஷியா உட்பட பல நாடுகளுக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமர் காலில் விழாத குறையாக சட்டவிரோத அகதிகள் வருகையை கட்டுப்படுத்துமாறு கைகூப்பி மன்றாடிவிட்டு வந்தார்.

ஆனால், கடந்த வருடம் இந்த விடயத்தில்கூட ஆஸ்திரேலிய காண்பித்த விட்டேந்தித்தனமான அணுகுமுறை இந்தோனேஷியாவை பயங்கரமாக சீற்றத்துக்குள்ளாக்கியது. அதாவது, “ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை கட்டுப்படுத்தும்படி இந்தோனேஷியாவை கோரியுள்ளோம். அதையும் மீறி, இனி இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் வந்தால், மீண்டும் இந்தோனேஷியாவுக்கே திருப்பி அனுப்புவோம்” என்று ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து, இந்தோனேஷியாவை பொறுத்தவரை வலிய வந்து சண்டைக்கு
இழுத்தது போலவே இருந்தது.

அகதிகள் விடயத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் காலகாலமாக எத்தனையோ உடன்படிக்கைகள், இணக்க வரைவுகள், ஒப்பந்தங்கள் என்று ஒருவித சமரச நிலையை பேணிவந்த பாரம்பரியத்தின் மீது ஆஸ்திரேலியா தடாலடியாக மேற்கொண்ட தாக்குதல் இரு நாட்டு உறவுக்கும் பங்கம் விளைவித்த நிகழ்வாகவே அமைந்தது.

இதேபோன்று, இந்தோனேஷியாவை கடும் சீற்றத்துக்கு உள்ளாக்கி அந்நாட்டு மக்கள் இந்தோனேஷியாவிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் வரை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வழிகோலிய சம்பவம், இந்தோனேஷிய அரச அதிபரின் கைத்தொலைபேசியை ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறையினர் ஒட்டுக்கேட்டதாக ஊடகங்கள் போட்டுடைத்த செய்தி.

இந்த செய்தியால் வெகுண்டெழுந்த இந்தோனேஷியா தங்கள் நாட்டின் இறையாண்மையின் மீது ஆஸ்திரேலியா வன்தாக்குதல் நடத்திவிட்டது என்று உறுமியது. நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொண்ட ஆஸ்திரேலியா, தனது தவறுக்கு மன்னிப்புக்கோரவேண்டும் என்றும் கூறியது.

ஆஸ்திரேலியாவோ, பிராந்தியத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்தோனேஷிய உட்பட தனக்கு அருகில் உள்ள எல்லா நாடுகளினதும் அமைதி நிலையை உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்கள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த ஒட்டுக்கேட்பு இடம்பெற்றது என்று வியாக்கியானம் கூறி மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது என்று முகத்தில் அறைந்தது போல கூறிவிட்டது.

ஆஸ்திரேலியாவின் இந்த ஏதேட்சதிகாரமான இரட்டைத்தவறு இந்தோனேஷியாவுக்கு அரசியல் - இராஜதந்திர ரீதியாக ஆறாதவடுவை ஏற்படுத்தியது.

இவை எல்லாவற்றினதும் பின்னணியில்தான், பாலி 9 விவகாரம் 2005 ஆம் ஆண்டு முதல் பூதாகாரமாகி பூமராங் போல வந்து ஆஸ்திரேலியாவையே மடக்கிப்பிடித்தது. இம்முறை இந்தோனேஷியாவில் கால்களில் விழவேண்டிய கட்டாய நிலைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது.

மயூரன் மற்றும் அன்ட்ரூவின் மரணதண்டனை எனப்படுவது முற்றிலும் சட்டம் மற்றும் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட விவகாரம். இதில், அரசியல் - இராஜதந்திர தலையீடுகளுக்கு இம்மியும் இடமில்லை. இது தெரிந்தும், இந்த மரணதண்டனை விவகாரத்தில் ஆஸ்திரேலிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டிய இக்கட்டானநிலைக்கு ஆஸ்திரேலிய அரசு தள்ளப்பட்டது. அதுதான் உண்மை. இதற்காக ஆஸ்திரேலிய அரசு இந்தோனேஷிய அரசுடன் பலவிதமான பேரப்பேச்சுக்களில் ஈடுபட்டது.

முதலில் மென்முறையை கடைப்பிடித்த ஆஸ்திரேலிய அரசு, "கடற்கோளால் பாதிக்கப்பட்டபோதெல்லாம் எவ்வளவோ உதவிகளை அள்ளித்தந்தோமே, அதற்கு நன்றிக்கடனாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட எங்கள் நாட்டின் பிரஜைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள்" என்று மன்றாடினார் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்.

அதற்கு இந்தோனேஷியா மசியாத காரணத்தினால், மிதவாத மென்முறைக்கு தன்னை நகர்த்திய ஆஸ்திரேலியா, கைதிகள் பரிமாற்றத்தின் ஊடாக ஏன் இந்த மரணதண்டனையை நிறுத்தக்கூடாது என்று யோசனையை முன்வைத்து "இந்தோனேஷிய கைதிகள் இருவரை நாங்கள் உங்களிடம் தருகிறோம். ஆனால், எங்கள் நாட்டின் பிரஜைகளை நீங்கள் எம்மிடம் தரவேண்டுமில்லை. மரணதண்டனை விதிக்காமல், ஆயுள்கைதிகளாக உங்கள் நாட்டு சிறையிலேயே வைத்திருங்கள்" - என்று கோரிக்கையை முன்வைத்தது.

மறுபேச்சுக்கே இடமில்லாமல், அந்த கோரிக்கையையும் இந்தோனேஷியா நிராகரிக்க வன்முறை மிக்க மிரட்டல் தொனியில் “எங்கள் வேண்டுதல்களை மீறி இந்த மரணதண்டனையை நீங்கள் நிறைவேற்றினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கான உதவிகளை குறைப்போம்” என்றெல்லாம் ஜூலி பிஷப் எச்சரிக்கை விடுத்தும் பார்த்தார்.

ஏதற்கும் அடிபணியாத இந்தோனேஷியா “சட்டம் தன் கடமையை செய்யும்” என்று சட்டத்தில் கட்டி சன்னங்களால் சல்லடை போட்ட ஆஸ்திரேலிய பிரஜைகள் இருவரதும் உடலங்களை பெட்டியில் போட்டு அனுப்பிவைத்தது.

ஏதோ பெரிதாக அறச்சீற்றம் கொண்டதுபோல, இந்தோனேஷியாவுக்கான ஆஸ்திரேலிய தூதுவரை மீள அழைத்ததுடன் ஆஸ்திரேலியா தீச்சட்டியை இறக்கிவைத்துவிட்டு, வரவு செலவு திட்ட வேலைகளில் மும்முரமாகிவிட்டது.

பாலி 9 விவகாரத்தில் இந்தோனேஷிய அரசு கொடுத்த தண்டனை மயூரன் மற்றும் அன்ட்ரூவுக்கு மட்டுமல்ல. ஆஸ்திரேலிய அரசுக்கும் சேர்த்துத்தான். இது ஆஸ்திரேலியாவுக்கும் தெரியும். ஆனாலும், இதில் ஆஸ்திரேலிய அரசு பெரிதாக பொங்கி ஆர்ப்பாட்டம் செய்யாதளவுக்கு “ஈரச்சாக்கு போட்டு அடித்தது போல” விஷயத்தை கையாண்டிருப்பதுதான் இந்தோனேஷியாவின் கெட்டித்தனம்.

சட்டமும் நீதியும் நடுநிலமையானவை என்றாலும்கூட அதை உருவாக்கும் அரசுக்கட்டுமானம் எனப்படுவது சூழ்ச்சிகள் நிறைந்த வலைகளால் பின்னப்பட்டுள்ளவரை அந்த நடுநிலமை என்பது கேள்விக்குரியாதாகவே அமையும்.

'பாலி 9: பாகம் 5' - "அண்ணா! உன்னை காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. மன்னித்துவிடு"


'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!



"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

Sunday, May 10, 2015

'பாலி 9: பாகம் 5' - "அண்ணா! உன்னை காப்பாற்ற எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. மன்னித்துவிடு"


மரணம் என்பது மனிதனுக்கு ஒருபோதும் விருப்பத்துக்குரிய நிகழ்வாக இருந்ததில்லை. சமரசமற்ற அந்த சம்பவம் இயற்கையாக நிகழும்போதே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதன், செயற்கையாக இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி அராஜமாக அமுல்படுத்தப்படும் மரணங்கள், சாபவர்களைவிட சுற்றத்தாரைத்தான் தவணைமுறையிலான சித்திரைவதைக்கு உள்ளாக்கிவிடுகின்றன.

அதுபோன்ற ஒரு மரணத்தின் பிடியில் அகப்பட்ட மயூரன் மற்றும் அன்ட்ரூவினால் இரண்டு தேசங்கள், அவர்களின் அனுதாபிகள் மற்றும் அரசியல்தலைவர்கள் என எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்ட நாட்களை ஆறு துப்பாக்கி ரவைகள் அமைதியாக நிறைவுசெய்திருக்கின்றன.

எல்லா மரணதண்டனைகைளயும் போலவே, மயூரனின் மரணமும் அவனைவிட அவனது குடும்பத்தினரைத்தான் மிகப்பாரிய அளவில் தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.;; இந்தப்பொதுவான வேதனையை - மயூரனின் உறவுகள் கண்ணீருடன் விடைகொடுக்கும் காட்சியை - உலக ஊடகங்கள் அனைத்தும் பதிவுசெய்துகொண்ட அவனது இறுதிநிகழ்வுகள், சுமார் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னிலையில் சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த நான்கு மாதங்களாக மயூரனுடன் சேர்ந்து மரணத்துடன் போராடிய மயூரனின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க தமது பாசத்திற்குரியவனை வழியனுப்பிவைத்தனர்.

“சட்டம் என்ன சொல்கிறதோ மற்றையவர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்கு தெரியாது, என் அண்ணன் எனக்கு ஹீரோ. அண்ணா! நீ போய் எனக்காக சொர்க்கத்தில் ஒரு இடமொதுக்கு! அங்கு உன் வீட்டில் எனக்கொரு ஆசனமும் தயார் செய்! நான் வந்து அதிலிருந்து நீ கீறும் படங்களை பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்" என்று இறுதிநிகழ்வில் மயூரனின் தங்கை பிருந்தா பேசும்போது அங்கு திரண்டிருந்த அரங்கமே கண்ணீர் வடித்தது.

“அண்ணா! உன்னை மீட்பதற்கு நான் என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டேன். அதற்காக நான் இழந்தது எவ்வளவோ. அது உனக்கும் தெரியும். இருந்தாலும், உன்னை என்னால் காப்பாற்றமுடியாவில்லை. என்னை மன்னித்துவிடு" என்று மயூரனின் தம்பி சிந்து தழுதழுத்த குரலில் பேசி முடிக்கும்போது அரங்கில் எவருமே தங்கள் உணர்வுகளைக்கட்டுப்படுத்தமுடியவில்லை. மயூரனின் தாயாரால் பேசமுடியவில்லை. சிந்துவின் தோள்களில் சாய்ந்தபடியே மயூரனின் உடலம் வைக்கப்பட்டிருந்த பேழையை பார்த்து விக்கி விக்கி அழுதார். அவ்வப்போது, பேசுவதற்கு எடுத்த முயற்சிகளையும் அவரது கண்ணீர் விழுங்கிக்கொண்டது. அதைப்பார்த்த அரங்கமும் கண்ணீரால் நிறைந்துகொண்டது. மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவனுக்கு இவ்வளவு பேர் திரண்டு கண்ணீர் வடித்தது ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இதுதான் முதல்தடவையாக இருக்கக்கூடும்.


மயூரனின் வரைதல்கலைக்கு கடைசி வரை உறுதுணையாகவிருந்த சித்திரக்கலைஞர் பென் மயூரனின் நினைவுகளை பகிர்ந்துகொள்கையில் -  சிறையிலிருந்து மயூரன் வரைந்த முப்பதுக்கும் மேற்பட்ட வரைபடங்களை மெல்பேர்னில் கண்காட்சியாக ஒழுங்குசெய்து நடத்தியபோது, அந்த படங்கள் அனைத்தும் சுமார் 14 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்களுக்கு விற்பனையாகின. அந்த பணத்தில் மயூரன் இந்தோனேஸியாவில் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறையில் வரைகலைக்கூடம் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது அவனது ஆசை. அங்கு சிறைவைக்கப்படும் கைதிகளுக்கு அந்த கலைக்கூடத்தில் வரைதல் சொல்லிக்கொடுத்து தாங்கள் குற்றவாளிகள் என்ற மனநிலையை மாற்றி அவர்களை வாழ்வில் நல்வழிப்படுத்தவேண்டும் என்ற மயூரனின்
விருப்பத்துக்கிணங்க இந்தப்பணம் சிறை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது என்று பென் தனது இறுதி உரையில் நினைவுகூர்ந்தார்.

'மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு முன் நான் மயூரனுடன் பேசிய தொலைபேசி கலந்துரையாடல் இன்னமும் எனது நெஞ்சில் அழியாமல் உள்ளது. தொலைபேசி அழைத்தபோது, அந்த எண்ணை பார்த்தபோதே மயூதான் அழைக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். தொடர்பை ஏற்படுத்தியவுடன், “ஹலோ! நான் இங்கு மயூரன் பேசுகிறேன். நீங்கள் யார் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது சிறந்த சித்திரக்கலைஞரா பேசுகிறீர்கள்..” என்று தொடங்கிய மயூவின் வார்த்தைகள் இன்னமும் என் நெஞ்சில் ஆழமாக பதிந்துகிடக்கின்றன – என்று கூறியுள்ளார்.



உணர்வுபூர்வமான இந்த பதிவுகள் ஒருபுறமிருக்க -

“போயும் போயும் ஒரு போதைப்பொருட்கடத்தல்காரனுக்கு இவ்வளவு பெரிய பில்டப்பா? இவனால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ? இவனை கொன்றிருக்காவிட்டால் சீரழிந்திருக்கக்கூடிய குடும்பங்கள் எத்தனையோ? வாய் கூசாமல் இவர்களையெல்லாம்போய் ஏதோ சுதந்திரபோராட்ட வீரர்கள் கணக்கில் ஊடகங்கள் எழுதுவது அருவருப்பாக இருக்கிறது” – என்று மரணதண்டனைக்கு ஆதரவான தரப்பினரும் போதைப்பொருள் தடைக்கு ஆதரவானவர்களும் எதிர்வாதங்களை முன்வைத்துவருகிறார்கள்.

இதற்கு இந்தோனேஸிய அரச தரப்பினரும் நீதித்துறையினரும் நடந்து முடிந்த மரணதண்டனைக்கு முன்வைத்திருக்கும் வாதங்களை பார்ப்போம்.

இந்தோனேஸியா எனப்படுவது போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகின்ற தேசம். தாய்லாந்து, மலேசியாஇ சிங்கப்பூர் போன்ற அயல்நாடுகளுடன் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலான போதைப்பொருட்கடத்தல் கும்பல்கள், இந்தோனேஸியாவைத்தான் தளமாக கொண்டு இயங்குகின்றன.

உள்நாட்டில் மலிந்துபோயுள்ள போதைப்பொருள் வியாபாரத்தால், சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட சனத்தொகையுள்ள இந்தோனேஸியாவில் 45 லட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 16 லட்சம் பேர் போதைப்பொருளுக்கு தீராத அடிமையாகி உயிர்தப்புவதற்கு மிகக்குறைந்த அளவு சந்தர்ப்பமே உள்ளதாக இந்தோனேஸிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக திடுக்கிடும் தகவல், அந்த நாட்டில் தினமும் 40 முதல் 50 பேர் போதைப்பொருள் பழக்கத்தால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள்.

மயூரன் மற்றும் அன்ட்ரூ குழுவினர் இந்தோனேஸயாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சித்த சுமார் 4 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான போதைப்பொருள் சுமார் 8200 பேரின் வாழ்க்கையை சீரழித்திருக்கும் என்று இவர்களது வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் தேசிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்ட இந்த போதைப்பொருள் விவகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டத்தை நாட்டின் அரசமைப்பில் இணைத்துக்கொண்டது இந்தோனேஸியா. கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது இந்தோனேஸியாவில் மீண்டும் முனைப்படைந்திருந்தாலும் அதற்கு வேறு காரணம் ஒன்றும் ஆழமாக பொதிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அல்வா போல ஒரு சர்ச்சைக்குள்ள விவகாரம் ஆட்சியை பிடிப்பதற்கான பிரதான பேசுபொருளாக இருக்கும். அந்த பருப்பை சரியாக வேகவைப்பவர்கள் ஆட்சியை பிடித்துக்கொள்வார்கள். உதாரணமாக, அது இலங்கையை பொறுத்தவரை இனப்பிரச்சினை வடிவிலும், ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அகதிகள் பிரச்சினை வடிவிலும் இருப்பதைக்காணலாம். இந்த வரிசையில், இந்தோனேஸியாவை பொறுத்தவரை போதைப்பொருள் பிரச்சினையை கூறலாம்.

இந்தோனேஸியாவில் ஆட்சியை பிடிக்க முயற்சிப்பவர்களும் ஆட்சியை பிடித்ததும் தம்மை இறுக்கமான தலைவர்களாக மக்களுக்கு காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும் அண்மைக்காலமாக போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிராக அம்பு வில்லோடு போர்க்கோலம் தரித்து தரிசனம் கொடுத்து மக்களின் வாக்குளை சுவீகரித்துக்கொள்வதற்கு வியூகம் அமைத்துக்கொள்வது வழமையாக தொடர்ந்துவருகிறது.

தற்போது ஆட்சியிலிருக்கும் ஆட்சியிருக்கும் ஜோக்கோ விடோடோவை பொறுத்தவரை இந்த பிரச்சினை அவர் ஆட்சிக்கு வந்தநாள் முதல் கழுத்தை வளைத்தபடியிருக்கும் விவகாரம் ஆகும். அதாவது, லஞ்ச – ஊழல் மலிந்து குற்றங்களால் பீடித்துப்போயிருந்த இந்தோனேஸிய அரச கட்டுமானத்தை மாற்றியமைத்து முற்றிலும் தூய்மையான மாண்புறு மக்களாட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆட்சித்தலைவராக மக்களால் கொண்டுவரப்பட்டவர்தான் தற்போதைய அரசுத்தலைவர் ஜோக்கோ விடோடோ. ஆனால், இவர் தனது நிர்வாகத்தில் மிகவும் மென்மையாக நடந்துகொள்கிறார். பிரச்சினைகள் எழும்போது சண்டியன்போல களத்தில் இறங்கவேண்டாமா என்று எதிர்க்கட்சிகள் இவர் மீது தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவந்திருந்தன.

அரசியல் பலிபீடத்தில் பலத்த எதிர்ப்புக்களை எதிர்நோக்கிவந்த ஜேகோ வுடோவுக்கு பாலி 9 விவகாரம் ஒரு பாசித்தாள் பரிசோதனையாகவே அமைந்தது. மயூரன், அன்ட்ரூ உட்பட எட்டுப்பேரின் மரணதண்டனை விவகாரத்தில் அவர் தயவு தாட்சண்யம் பார்க்க தயாராக இருந்தாலும் அவரது அரசியல் இருப்பும் அமைச்சரவையும் அவரை சூழ்நிலைக்கைதியாகவே பணயம்வைத்திருந்தார்கள். இவ்வாறான ஒரு பொறிக்குள் இருந்துகொண்டு “போட்டுத்தள்ளுங்கடா” என்ற உத்தரவைத்தவிர வேறெதையும் உச்சரிக்க அவருக்கு வழியில்லை. இதுபோன்ற உள்நாட்டு அரசியல்சிக்கல்களின் விளைவும்தான் மயூரன் மற்றும் அன்ட்ரூ ஆகியோரது மரணம் ஆகும்.

அப்படியானால், மிகவும் அதிகாரமும் ஆதரவும் மிக்க ஆஸ்திரேலிய அரசு இந்த சிக்கல்களை முன்பே உய்த்தறிந்து ஏன் இந்த மரணங்களை தடுக்கமுடியாமல்போனது? அடுத்த பத்தியில் பார்ப்போம்.

'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!

"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

Wednesday, May 6, 2015

'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


தமிழர்கள் சகல துறைகளிலும் திறமைவாய்ந்தவர்கள் என்ற விடயத்தில் நல்லது கெட்டது எல்லாமே அடங்கும் என்பதற்கு உலகின் எல்லா மூலையிலும் உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில், மயூரன் சுகுமாரனின் சாகச படலம் கடைசியில் அவனை எந்த முடிவுக்கு கொண்டுபோய் சேர்த்தது என்பதிலிருந்து அவனது பாதை எத்துணை கொடியது என்பதை தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அடித்தும் இடித்தும் சொல்லியிருக்கிறது.

ஆனால், அந்தவிதமான சட்டவிரோத பாதையிலும் - இது ஒன்றும் பெருமை தரக்கூடிய விடயம் இல்லை ஆயினும் - மயூரன் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டான் என்பதை அவனுடன் கைதுசெய்யப்பட்ட 'பாலி 9' கைதிகளில் ஒருவனான டான் டக் என்பவன் தனது முகநூலில் பதிவுசெய்திருக்கிறான்.

டான் டக் தற்போது போதைப்பொருட்கடத்தல் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக இந்தோனேஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஜாவா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளான். இவனது வழக்கு முதன் முதலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து மேன் முறையீடு செய்தபோது, நீதிமன்றம் இவனது தண்டனை காலத்தை 20 வருட சிறைத்தண்டனையாக குறைத்தது. அதனையும் எதிர்த்து மீண்டும் மேன் முறையீடு செய்தபோது, புதிய தகவல்களையெல்லாம் தோண்டி எடுத்து அரச தரப்பு சட்டத்தரணிகள் ஆழமாக ஆப்பு இறுக்க, நீதிமன்றம் டான் டக்கிற்கும் மரண தண்டனை வழங்குவது எனத்தீர்ப்பளித்தது. இது அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாகிப்போக, சுமார் இரண்டு வருடங்கள் போராடி அடுத்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, நீதிமன்றம் மீண்டும் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்து. இனி எந்த ஆணியும் புடுங்கவேண்டம் என்ற முடிவோடு உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு, பத்து வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கிறான் டான் டக்.

அன்ட்ரூ ஷானைவிட மயூரனுடன் நெருங்கிய பழகிய டான் டக், மயூரனின் இழப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளான். இதுவரை தான் எவருக்கும் கூறாத விடயம் என்று மயூரனுடனாக தனது அனுபவத்தினை பின்வருமாறு பதிவு செய்திருக்கிறான்.

"பத்து வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி,  பாலியின் பிரபல்யமான சுற்றுலா நகர் கூட்டாவிலுள்ள ஜப்பானிய உணவகம் ஒன்றில் நானும் மயூவும் உணவருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, போதைப்பொருட்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணமான எமது குழுவின் நான்கு பேர் இந்தோனேஸிய விமானநிலையத்தில்வைத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் மயூவுக்கு கிடைத்துவிடுகிறது. அந்த சமயம், மயூ நினைத்திருந்தால், மிகவும் பாதுகாப்பாக இந்தோனேஷியாவை விட்டு உடனடியாகவே தப்பியிருக்கலாம். ஆனால், மயூ அதைப்பற்றி கிஞ்சித்தும் எண்ணாமல், ஹோட்டலில் உள்ள எமது குழுவின் மீதி இருவரையும் வேறு இடத்துக்கு மாற்றி, அவர்களை பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என்ற முடிவுடனேயே செயற்பட்டான். அந்த நேரத்தில், மயூவின் முடிவு எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தை அளித்தது.

"உணவகத்திலிருந்து உடனடியாகவே ஹோட்டலுக்கு விரைந்த மயூ, அங்கிருந்து எமது குழுவின் இரண்டுபேரையும் துரிதமாக அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்கு புறப்பட தயாராகுமாறு கூறினான். அதற்கிடையில், மோப்பநாய்களுடன் ஹோட்டலை சு10ழ்ந்துகொண்ட இந்தோனேஷிய காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு படையினரும் எமது இருப்பிடத்தை கண்டுபிடித்து எமது அறைகளுக்குள் பாய்ந்துவிட்டனர்" - என்று டன் டக் கூறியுள்ளான்.

பாலி 9 விவகாரத்தை முழுமையாக கையாண்ட இந்தோனேஷிய அதிகாரி நீதிமன்றுக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கையில் - ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆஸ்திரேலிய காவல்துறையிடமிருந்து எமக்கு கிடைத்த தகவலில் ஆஸ்திரேலிய பிரஜைகளின் இந்த போதைப்பொருட் கடத்தல் குறித்த எல்லா தகவல்களும் துல்லியமாக இருந்தபோதும், மயூரனின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தோனேஷிய காவல்துறை இந்த ஆஸதிரேலிய போதைக்கட்டத்தில் குழுவை எட்டு நாட்களாக கண்காணித்துக்கொண்டிருந்தபோதுகூட மயூரன் இந்த கூட்டத்தில் என்ன பங்கு வகிக்கிறான் என்று தெரிந்திருக்கவில்லை. நாம்கூட, அன்ட்ரூ ஷானின் மெய்ப்பாதுகாவலன்தான் மயூரன் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.

“ஏப்ரல் 17 ஆம் திகதி, கூட்டாவில் மேற்கொண்ட கைது நடவடிக்கையின்போது, இந்த இளைஞர்கள் தங்கியிருந்த அறையின்வெளியேதான் மயூரன் நின்றுகொண்டிருந்தான். காவல்துறையினர்தான் அவனை உள்ளே தள்ளிச்சென்று எல்லோரையும் கூட்டமாக கைது செய்துகொண்டு வந்தனர். அவ்வளவுக்கு மயூரனின் பங்கு இந்த கூட்டத்தில் மிகவும் இரகசியமானதாகவும் மர்மமாகவும் இருந்தது" - என்று கூறியிருந்தார்.

தனது சகாக்களை இந்த கைது படலத்தில் கைவிட்டுவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் செயற்பட்ட மயூரனுக்கு எதிராக பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் மற்றும் பலத்த சாட்சியங்கள் சட்டத்தின் பாதையில் அவனை பாரதூரமான முடிவுக்கு அழைத்து சென்றுவிட்டதாக கூறும் டான், தனது வாழ்நாளில் மயூவை என்றைக்கும் மறக்கமுடியாது என்று கூறியுள்ளான்.

கடந்த 29 ஆம் திகதி, மயூரன் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை சிறையிலுள்ள தொலைக்காட்சியில் தான் நேரடியாக பார்த்ததாகவும் மயூவுக்கு ஏற்பட்ட முடிவால் அந்தக்கணம் தான் அதிர்ச்சியில் உறைந்துதுபோனதாகவும் தெரிவித்துள்ளான்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக தனித்தீவுக்கு மாற்றப்பட்ட மயூரன் தனது கடைசி நாட்களில் எவ்வாறான ஒரு மர்மம் நிறைந்த வாழ்க்கையை கழித்தான் என்பதை, மயூரன் வெளியே எழுதிய கடிதம் ஒன்று தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.



அந்த கடிதத்தில் மயூரன் எழுதுகையில் -

“இந்தோனேஷிய சிறையிலிருந்து இங்கு நாங்கள் மாற்றப்பட்டநாள் முதல் எல்லாமே ஓருவித மனக்குழப்பம் நிறைந்த நேரங்களாகவே கழிகின்றன. வெளியுலகில் என்ன நடக்கிறது என்று எமக்கு எதுவும் தெரியவில்லை. முன்பிருந்த சிறை எவ்வளவோ பரவாயில்லை. இங்கு நாம் பயங்கரமாக தனித்துவிடப்பட்டிருக்கிறோம்.

"சிறைக்கட்டுப்பாடுகள் அதிகம். ஆனாலும், இங்குள்ள காவலாளிகள் பரவாயில்லை. இயன்றளவு எமக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். ஏனைய கைதிகளுடன் நாங்கள் பேசுவது குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்குள்ள மிகச்சிறிய தேவாலயத்துக்கு நாங்கள் வாரம் ஒருமுறை சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளோம். இங்கு 17 பேர்தான் கிறீஸ்துவர்கள்.

"வெகுவிரைவில் எமக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

"சித்திரம் கீறுவதை இங்கும் நான் கைவிடவில்லை. வரைவதற்கான பொருட்கள் வாங்கித்தருமாறு சிறை நிர்வாகத்தினரை கேட்டிருக்கிறேன். அதேவேளை, இருக்கும் பொருட்களை வைத்து வரைதல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். என்னுடன் ஒன்றாக இருந்து எனது வரைதலை ஊக்குவிப்பதற்கு இங்கு பெரிய அளவில் ஆட்கள் யாரும் இல்லை. இருந்தாலும் இங்குள்ள சிறைக்காவலாளி ஒருவர் தனது நண்பர் ஒருவரின் ஐந்து படங்களை வரைந்துதருமாறு கோரியுள்ளார். அந்தப்பணியில் நான் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.

“ஆம்ஸ்ரடாம் சித்திரக்கண்காட்சியில் எமது வரைபடங்கள் வரவேற்பை பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. லண்டன் கண்காட்சியில் என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை. நான் இல்லாமல் எனது படங்கள் அரங்கேறும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவதை எண்ணும்போது மிகுந்த பொறாமையாக இருக்கிறது. ஆனால், நான் இல்லாமல் எனது படைப்புக்கள் பேசுவதில் எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.

“நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த கடிதம் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நம்புகிறேன்”

- என்று குறிப்பிட்டுள்ளான்.

“பாலி 9” என்ற தொடர் பற்றி, அண்மையில் வெளிநாடொன்றிலிருந்து பேசிய தோழி ஒருவர் -

“போதைப்பொருள் கடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு பேருக்காக உலகமே ஆதரவளித்தது என்றால் இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும். அவ்வளவுதூரம், இந்த இரண்டு இளைஞர்களும் தங்கள் நன்நடத்தையின் மூலம் குற்றத்தின் பின்னரான மனமாற்றத்தின் மூலம் முழு உலகினதும் மனசாட்சியை புரட்டிப்போட்டுவிட்டனர். இவர்களது இந்த சாதனையின் முன்னால், எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக எழுதிவைத்த சட்டங்கள், நீதிவாசகங்கள் எல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. ஆனாலும், ஒரு ஆளும் அதிகார வர்க்கத்தின் முரட்டு பிடிவாதத்தினாலும் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்கள் ஆகிவிட்ட துரதிஷ்டத்தாலும் இந்த இளைஞர்களின் உயிர் இன்று பறிக்கப்பட்டிருக்கிறது” – என்றாள்.

"Capital punishment is as fundamentally wrong as a cure for crime as charity is wrong as a cure for poverty" - Henry Ford

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)

"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!

"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

Monday, May 4, 2015

"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ ஷான் ஆகியோரது மரணதண்டனை விவகாரத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு அடுத்ததாக பலதரப்பினராலும் அதிகம் வறுத்தெடுக்கப்பட்டவர்கள் ஆஸ்திரேலிய காவல்துறையினர்தான். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்களை கடத்திக்கொண்டுவரவுள்ளது என்ற தகவலை அறிந்த ஆஸ்திரேலிய காவல்துறை, அந்த கூட்டத்தை ஆஸ்திரேலியா வந்திறங்கியதும் ஆஸ்திரேலிய விமானநிலையத்தில் வைத்து கைது செய்யாமல், அவர்கள் இந்தோனேஷயாவில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டால் அந்நாட்டு சட்டத்தின்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும், அவர்களை இந்தோனேஷியாவிடம் “போட்டுக்கொடுத்தது” ஏன் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய காவல்துறை பத்து வருடங்களாக வாய் திறக்காமலே இருந்துவந்தது.

அத்துடன் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய இளைஞனின் தந்தை, பாலி கைது சம்பவத்துக்கு பின்னர் வெளியிட்ட தகவலும் ஆஸ்திரேலிய காவல்துறையை கடந்த பத்துவருடங்களாக மக்கள் அரங்கில் பாரதூரமான குற்றவாளியாக முன்னிறுத்தியது.

அதாவது,

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்காக பாலிக்கு பயணமாகும் முன்னரே இதில் சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய இளைஞன் ஒருவனின் தந்தையாருக்கு தனது மகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது. அவன் பாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் போதைப்பொருட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடப்போகிறான் என்பதை ஓரளவுக்கு அவரால் ஊகிக்க முடிகிறது. ஒரு பொறுப்புள்ள தந்தையாக தனது மகனை காப்பாற்றுவதற்கு அவர் துரிதமாக செயற்படுகிறார். தனது மகன் இந்தோனேஷியாவில் போய் போதைப்பொருளுடன் அகப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் சுதாரித்துக்கொண்ட அவர், ஆஸ்திரேலிய காவல்துறையினரை நேரில் சந்தித்து, தனது மகனின் இந்தோனேஷிய பயணத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறார். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக உறுதியளிக்காத ஆஸ்திரேலிய காவல்துறையின் அசட்டையீனத்தால் மனமுடைந்துபோயிருக்கையில், ஓரிரு வாரங்களில் தனது மகன் உட்பட ஒன்பது பேர் பாலியில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவதை செய்தியாக பார்க்கிறார்.

2005 இல் இடம்பெற்ற பாலி கைது சம்பவத்துக்கு பின்னர் தனது மகனை காப்பாற்றுவதற்காக ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டபோது, ஆஸ்திரேலிய ஊடகங்கள் உட்பட அனைத்துதரப்பினரும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் மீது காறி துப்பாத குறையாக காண்டாகிவிடுகிறார்கள்.

“ஒரு பொறுப்புள்ள தகப்பன் தனது மகனை காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சியை இந்த நாட்டின் காவல்துறை தட்டிக்கழித்துவிட்டு இன்னொரு நாட்டின் காவல்துறைக்கு வாலாட்டியிருக்கிறது. ஆஸ்திரேலிய காவல்துறை தனது நாட்டின் குடிமக்களுக்காக செயற்படுகிறதா அல்லது இன்னொரு நாட்டின் பாதுகாப்புக்காக எமது நாட்டு குடிமக்களின் உயிர்களை பலியாக்குகிறதா” என்று ஆஸ்திரேலிய காவல்துறையை நாலா பக்கமும் தாறுமாறாக ஊடகங்கள் கிழிக்கத்தொடங்கின.

இந்த இரண்டு விடயங்களுக்கும் பத்து வருடங்களாக மௌனம் காத்துவந்த ஆஸ்திரேலிய காவல்துறை, மயூரன் மற்றும் அன்ட்ரூவின் மரணங்களுக்கு பின்னர் எழுந்த உள்நாட்டு அழுத்தங்களையடுத்து மக்களுக்கு பதிலளிக்கவேண்டிய கடப்பாட்டுடன் ஊடகங்களின் முன் தோன்றியது.


இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது, பாலி9 விவகாரத்தை முற்றுமுழுதாக கையாண்ட ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில் -

“எமது நாட்டின் இரண்டு பிரஜைகள் வெளிநாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் வருந்தத்தக்கதுதான். அதற்காக அவர்கள் செய்த குற்றம் ஒன்றும் செல்லுபடியற்றது என்றாகிவிடாது. இந்தோனேஷிய காவல்துறையிடம் இவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு முன்னர் ஒன்றுக்கு நூறுதடவை யோசித்து நிதானமாகத்தான் செயற்பட்டோம். இன்றும்கூட, பத்து வருடங்களுக்கு முன்னர் நாம் எடுத்த முடிவு பற்றி சிந்தித்துபார்க்கும்போது, அதில் பிழை ஒன்றும் இருப்பதாக எமக்கு தெரியவில்லை.

“இந்த நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டவிருந்த போதைப்பொருட்களையும் அதன் மூலம் நிகழவிருந்த ஆயிரக்கணக்கான மரணங்களையும் நாங்கள் தடுத்திருக்கிறோம். அதற்காக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், இரண்டு உயிர்கள் இழக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. ஊடகங்கள் கேட்பது போல, இந்த இரண்டு உயிர்கள் போனதற்கு நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. ஏனெனில், நாங்கள் எம் கடமையைத்தான் செய்தோம்.

“இந்த இரண்டு மரணங்களின் பின்னர் எமக்கு இதன் பின்விளைவுகள் விளங்கிவிட்டது, ஆகவே இனிவரும் காலங்களில் எமது நாட்டு பிரஜைகளை மற்ற நாடுகளிடம் மாட்டிவிடாமல் நாங்களே தண்டிப்போம் என்று கூற எமக்கும் விருப்பம்தான். ஆனால், அவ்வாறு எம்மால் செயற்பட முடியாது.

“ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பான பணியில் உள்ள நாம், அதற்காக மேற்கொள்ளும் எமது நடவடிக்கைகளையோ அல்லது அது குறித்த தகவல்களையோ எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாது.

“உண்மையில், பாலியில் இந்தக்குழுவினர் கைது செய்யப்பட்டமைகூட ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருட்களை கடத்தும் பெரிய கூட்டமொன்றை கைது செய்வதற்கான மிகப்பெரிய திட்டத்தில் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவம்தான். அப்போது, எமக்கு இவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், இவர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்று எதுவும்; எமக்கு தெரியாது. எமக்கு அறியக்கிடைத்த தகவல் எல்லாம், இவர்கள் போதைப்பொருட்களுடன் ஆஸ்திரேலியாவுக்குள் இறங்கப்போகிறார்கள் என்பது மட்டுமே. இந்த கைது சம்பவம் சட்டத்தின் கைகளில் அகப்பட்டு, இவ்வளவு பாரதூரமான முடிவுவரை பயணிக்கும் என்று அப்போது நாம் எதிர்பார்க்கவில்லை. அதற்காக, அப்படி எதிர்பார்த்திருந்தாலும் நாங்கள் எமது கடமையை செய்யாமல் ஒதுங்கியிருக்கமாட்டோம்.

“இந்த கடத்தல் கூட்டம் ஆஸ்திரேலியா வந்த பின்னர் அவர்களை கைது செய்திருக்கலாம் என்பது பல சிக்கல்கள் நிறைந்த விடயம். அவர்கள் ஆஸ்திரேலியாவினுள் சில முக்கிய தரப்புக்களை பணம் கொடுத்து சமாளித்து போதைப்பொருட்களை எந்த தடைகளும் இன்றி கொண்டுவந்திருக்கலாம். அல்லது, விமானத்திலேயே வேறு பயணிகளிடம் போதைப்பொருட்களை கைமாறியிருக்கலாம். இப்படி, இந்த ஊகங்கள் எல்லாம் பல்வேறு சிக்கலான சாத்தியக்கூறுகள் நிறைந்த விவகாரம்.

“கடத்தில் சம்பந்தப்பட்ட ஒரு இளைஞனின் சந்தேகமான நடவடிக்கைகள் குறித்து அவன் பாலிக்கு புறப்படுவதற்கு அவனது தந்தை எம்மிடம் முறைப்பாடு செய்த விடயம் உண்மைதான். ஆனால், எந்த ஆதாரமும் இன்றி இந்த நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு பயணத்தடை போடுவதற்கு சட்டத்தில் இடமேயில்லை. ஊகத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய காவல்துறை நடவடிக்கை எடுக்கமுடியாது. எடுக்கவும் மாட்டாது. ஒரு பேச்சுக்கு, அவ்வாறு அந்த இளைஞனின் பாலிப்பயணம் தடுக்கப்பட்டிருந்தாலும்கூட இறுதி முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது” – என்று ஆஸ்திரேலிய காவல்துறை மிகத்தெளிவாக ஊடகவியாளர் மாநாட்டில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளித்துள்ளது. அத்துடன், மயூரன் - ஷான் மரணதண்டனை விவகாரத்தில் தனது கைகளில் இரத்தக்கறை எதுவும் இல்லை என்றும் ஆணித்தரமாக அடித்துக்கூறிவிட்டது.

அதேவேளை, இன்னொரு விடயத்தையும் கோடிட்டுகாட்டியுள்ள ஆஸ்திரேலிய காவல்துறை “இனிவரும் காலங்களில், மரண தண்டனையை இன்னமும் அமுல்படுத்திவரும் நாடுகளிடம் ஆஸ்திரேலிய குற்றவாளிகள் குறித்த தகவல்களை பகிரும்போது அது தொடர்பில் நாம் தற்போது செயற்பட்டு வரும் புதிய சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் செயற்படுவோம்” – என்று குறிப்பிட்டுள்ளது.

பாலி 9 விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறை ஒரு தசாப்தகாலமாக விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்ட வந்த ஒரு தரப்பாகும்.  அதேவேளை, ஆஸ்திரேலிய காவல்துறை இந்த விவகாரத்தில் மட்டுத்தான் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றது என்றும் கூறிவிட முடியாது. ஆஸ்திரேலிய காவல்துறையின் பல கடந்த கால நடவடிக்கைகள் ஊடகங்களாலும் நடுநிலை அமைப்புக்களாலும் சில வேளைகளில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தினாலும் கண்டிக்கப்பட்டிருக்கின்றன.

ஈழத்தமிழர்கள் தரப்பிலிருந்து நோக்குவதாயின், கடந்த 2007 ஆம் ஆண்டு மெல்பேர்னிலும் சிட்னியிலும் கைது செய்யப்பட்ட மூன்று ஈழத்தமிழர்கள் விவகாரம் என்பது ஆஸ்திரேலிய காவல்துறை பாரதூரமாக விரலை சுட்டுக்கொண்ட வழக்கு என்று கூறலாம். இந்த வழக்கின் முடிவில் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தினாலேயே ஆஸ்திரேலிய காவல்துறையினர் கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.

தமிழர் தாயக்கத்தில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவி செய்வதற்கு ஆஸ்திரேலியாவில் திரட்டப்பட்ட நிவாரண நிதியை விடுதலைப்புலிகளின் ஆயுதக்கொள்வனவுக்கு வழங்கினார்கள் என்ற அடிப்படை குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆஸ்திரேலிய காவல்துறை 2007 ஆம் ஆண்டு மூன்று ஈழத்தமிழர்களை கைது செய்திருந்தது. இவர்களில் ஒருவரை, ஏதோ கையில் ஆயுதங்களுடன் திரியும் கொலைவெறிபிடித்தவனை கைது செய்வதுபோல, துப்பாக்கி முனையில் நடுவீதியில் வைத்து கைது செய்தது மட்டுமல்லாமல் இந்த கைதுக்கு எந்த சட்ட ஆதாரமும் இருக்கவில்லை. மூவரை கைது செய்தாயிற்று. ஆனால், அடுத்தது என்ன செய்வது என்று தெரியாதவர்கள் போல சுமார் இரண்டு வருடங்களாக இந்த வழக்கை ஏலேலோ ஏலேலோ என்று இழுத்து கடைசியில் நீதிமன்றிடம் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி, ஈற்றில் கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

துப்புக்கிடைத்த பரபரப்பில் அல்லது சட்டத்துக்கு அப்பாற்பட்ட மறைமுக அரசியல் கரங்களின் அழுத்தங்களில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக செயற்படுவதும் இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் மேற்குலக அதிகார கட்டமைப்புக்களிலும் விதிவிலக்கான விடயம் அல்ல.

 It is the first responsibility of every citizen to question authority. - Benjamin Franklin

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!


"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...