Wednesday, November 19, 2014

சாரு எனப்படும் "சகலகலா வல்லவன்"

சாரு என்றழைக்கப்படும் எனது உற்ற தோழனின் - கலைத்தாயின் செல்ல மகனின் - பிறந்தநாள் இன்று.

இந்தப்பதிவு நான் நெடுநாட்களாய் எழுதத்தோன்றிய விடயத்தின் ஒரு விஸ்தீரணமான விவரிப்பு. வெளிக்கொணரப்படவேண்டிய கலைஞன் ஒருவனின் சிறுகுறிப்பு.

சாரு என்றழைக்கப்படும் சாரங்கனை –

உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் “படலைக்கு படலை” என்ற நாடகத்தின் ஊடாக ஒரு நகைச்சுவை அரங்காற்றுகை பாத்திரமாக அறிந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளனாக தாளவாத்திய கலைஞனாகவும் மேடைகளில் பார்த்திருக்கிறார்கள்

ஆனால், இந்தப்பதிவு, சாரு எனப்படும் - பலரும் அறிந்திராத - இசையமைப்பாளன் பற்றியதாகவும்.

இன்று உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழ் இளையோர்கள் பல முனைகளில் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதும், அவர்களது படைப்புக்கள் பல்தேசிய மக்களால் அங்கீகரிக்கப்படுவதும் எமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடையாளங்கள் ஆகும்.

ஆனால், இவ்வகையான mainstream audienceஸின் ரசனைக்கு விருந்தாகும் படைப்புக்களை வழங்கவல்ல ஒரு கலையுலக பிரவேசத்துக்கு முன்னோடிகளாக தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் ஒரு இளைஞர்படை தங்கள் புதிய சிந்தனைகளுடன் களமிறங்கியது. பிரான்ஸில் கிளம்பிய அந்த புயல் இன்றுவரை உலகளாவிய ரீதியில் ஒரு அதிர்வை ஏற்படுத்திக்கொண்டுதானிருக்கிறது.

அந்த இளைஞர்கள் பெயர்களை அடுக்கிச்சென்றால், அவர்களைவிட அவர்களின் படைப்புக்கள் அதிகம் பேசும்.

அவர்கள்தான் -

உலகயே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த விஜய் ரி.வியின் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” “ஜோடி நம்பர் வன்” நடன போட்டிகளில் வெற்றி நாயகனாக வலம் வந்த பிரேம்கோபால்.

தனது தொடர்ச்சியான குறும்படங்களின் ஊடாக வித்தியாசமான கலைப்பரிமாணங்ளை யதார்த்த வாழ்வியலின் சாட்சியங்களாக சமர்ப்பித்து எங்கள் கண் முன்னே கொண்டுவரும் சதா பிரணவன்.

நாடகம், குறும்படம் என்று வளர்ந்து தானே தயாரித்து நடிக்கும் திரைப்படங்களை இயக்கும்வரை முன்னேறி ஷங்காய் திரைப்படவிழா வரை "Gun & Ring" என்ற தங்களது திரைப்படத்தை கொண்டு சென்று திரையிட்ட வெற்றிநாயகன் மன்மதன் பாஸ்கி.

போட்டி செறிந்த தென்னிந்திய திரைக்களத்தில் நுழைந்து "கலாப காதலன்" "இராமேஸ்வரம்" போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்த இன்னொரு இசைப்பண்டிதன் நிரு.

இவர்களின் வரிசையில், நகைச்சுவை நாடக கலைஞனாக அறிமுகமாகி பின்னர் தன்னை பல பரிமாணங்களில் செதுக்கி புதிய சாளரங்கள் வழியே தனது இசைத்திறமைகளை விஸ்தீரணமாக வளர்த்துக்கொண்டவன் சாரு.

பிரான்ஸில் தமிழ் தொலைக்காட்சியொன்றில் பணிபுரிந்த காலத்திலேயே தனது இசைப்பயணத்தை ஆக்ரோஷமாக ஆரம்பித்தவன், முற்று முழுதாக computerise பண்ணிய இசையை தகுந்த தொழில்நுட்ப அணுகுமுறையின் ஊடாக லாவகமாக பயன்படுத்தும் வித்தையை இன்றுவரை அற்புதமாக கையாண்டு வருபவன்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், இசைத்தொகுப்பு ஒன்றிற்காக பாடல் ஒன்றை கேட்டதோடு தொடங்கிய எமது நட்பு இன்றுவரை இசை எனும் வலுவான பாலத்தில்தான் அதிகம் பயணம் செய்துகொண்டுள்ளது. எந்த ஒரு பாடல் புதிதாக வெளியானாலும் அது பற்றி ஒரு ஆராய்ச்சி, புதிய பாடகர்கள் - இசையமைப்பாளர்கள் - இசை குறித்த விமர்சனங்கள், வித்தியாசமான படைப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்றெல்லாம் வாரம் ஒரு முறையாவது மணிக்கணக்கில் உரையாடுவோம். சலிப்பதே இல்லை. ஆனால், சாருவின் இசைஞானம் விசாலமானது. அவனது பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் சிலவேளைகளில் பாரிய வித்தியாசம் இருக்கும்.  அவ்வாறு அமைந்ததுதான் எமது முதல் சந்திப்பும்கூட.

முதலில் குறிப்பிட்டதுபோல, சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இசைத்தொகுப்பு ஒன்றிற்காக பாடல்களை கோர்க்கும் பணியில் பயங்கர பிஸியாக ஓடித்திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் நண்பன் ஒருவன், “படலைக்கு படலை சாரு மியூஸிக் செய்யிறவன் என்று கேள்விப்பட்டனான். எதுக்கும் கேட்டுப்பாரன்” என்றான். அதற்குப்பிறகு, சாருவை சந்தித்து நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு பாட்டு தருவதாக முடிவு செய்யப்பட்டது.

இறுவட்டுக்கான பாடல்கள் எல்லாம் நிறைவடைந்துவிட்டது. சாருவின் பாடல் ஒன்றுதான் பாக்கி. சிட்னியில் இளங்கோ அண்ணன் வீட்டு Recording தியேட்டரில், ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு சாருவின் பாட்டு Recording ஆரம்பிக்கிறது. பாட்டு ரெடியானதும் அதை எடுத்துக்கொண்டு, மற்றைய பாடல்களையும் சேர்த்து final mixing and mastering தரப்படுத்தலுக்காக ஜோர்ஜ் என்பவரிடம் கொண்டுசெல்வதற்கு இளங்கோ அண்ணனுடன் பேசிக்கொண்டு நான் வெளியே காத்திருந்தேன்.

9…10…11...12…1... அதிகாலை 2 மணியிருக்கும். வெறித்த பார்வையுடன் Recording தியேட்டரைவிட்டு வெளியே வந்தான் சாரு. ஐந்து மணித்தியாலங்கள் ஒரே இடத்திலிருந்து Composing வேலை பார்த்தது களைப்பாகத்தானே இருக்கும் என்று நினைத்துக்கொண்டு, எப்படியும் பாட்டு ரெடிதானே என்ற சந்தோஷத்துடன் எழும்பிய எனக்கு சாருவின் பதிலோ என்னை மீண்டும் கதிரையில் தொப் என்று போட்டுவிட்டது.

“என்ன இழவு பிடிச்சவங்களடா..!! சொல்லிக்குடுக்கிறத பாடத்தெரியாமல் வந்துநிண்டு கொக்கரிச்சுக்கொண்டு நிக்கிறாங்கள். ஒண்டு மாறி ஒண்டு என்று ரெண்டு பேரை வச்து Try பண்ணீட்டன் மச்சி, சுதி மருந்துக்கும் சேருதில்லை. நேரம் போகுது. ஓன்றில் நீ பாடு. அல்லது, இந்தப்பாட்டை Drop பண்ணுவம். மற்ற பாட்டுகளை நீ Masteringகுக்கு கொண்டு போ” என்றான்.

இவ்வளவு கஸ்டப்பட்ட பிறகு பாட்டை கைவிடுவது என்பது சரியென்று எனக்குப்படவில்லை. “சரி உள்ளே நட” என்றுவிட்டு Recording தியேட்டருக்குள் இருவரும் சென்றோம்.

சரியாக நான்கு மணிக்கு Recording முடிந்தது. அதுவரை அந்தப்பாட்டு பற்றி எந்த தகவலும் தெரியாத எனக்கு, பாடி முடித்தப்பின்னர்தான் புரிந்தது, நல்லகாலம் அந்த பாடல் என்னைவிட்டுப்போகவில்லை என்று. அப்படி ஒரு பாடல். இன்றுவரை, எனது Paly Listல் அகற்ற முடியாத மெட்டாகவே குந்திக்கொண்டிருக்கிறது. இந்தப்பாடலில் வரும் எந்த இசைக்கருவியும் Manualலாக வாசிக்கப்பட்டதல்ல. ஆனால், அந்த பாடலை கேட்கும் எவரும் அதை நம்பமாட்டார்கள். அப்படியொரு instrumental arrangement.

பாட்டு முடிந்து மறுநாள், எல்லா பாடல்களையும் ஜோர்ஜிடம் கொண்டு சென்றேன். ஜோர்ஜ் என்பவர் Greek நாட்டு இசைவிற்பனர். Final version பாடல் வெளிவரும் முன்னர், ஸி.டி. ஒன்றில் எல்லா பாடல்களும் சமமான Volume ல் கேட்க வைப்பது உட்பட நுணுக்குமான சத்தச்சேதாரங்களை கழிவு செய்வது போன்ற இறுதிப்படுத்தும் வேலைகளில் கைதேர்ந்தவர்.

நான் கொண்டு சென்ற பாடல்கள் எல்லவாற்றையும் தனது கணனியில் ஏற்றிவிட்டு ஒன்றொன்றாக கேட்டுக்கொண்டுவந்தார். “கார்த்திகை பூக்களே” என்ற பாடலைக்கேட்டதும், கண்கள் விரிந்து ஆச்சரியம் முகத்தில் பூரிக்க “இந்த பாடல் யார் arrangementnசெய்தது” என்றார். நானும் சாருவைப்பற்றிக்கூறினேன். ஒரு பத்துநிமிடங்களுக்கு ஓயாது wonderful, marvelous, fantastic என்று துதி பாடிக்கொண்டே இருந்தார். சாருவுடன் பேசலாமா என்றார். Call பண்ணிக்கொடுத்தேன். அவரால் ஆங்கிலத்தில் அதிகமாக சாருவை தொலைபேசியில் பாராட்ட முடியவில்லை. ஆனால், அவர் அருகில் நின்று பார்த்த எனக்கு, அவரது முகபாவனைகளிலிருந், அவர் சாருவை எவ்வளவுக்கு பாராட்ட முயற்சித்தார் என்பது அப்படியே தெரிந்தது.

அப்போதுதான் புரிந்தது, சாருவின் இன்னொரு திறமை. இசையமைப்பில் மிக முக்கிய Post Production காரியமான Mastering / Balancing வேலையில் சாரு அப்படி ஒரு பாண்டித்தியம் நிறைந்தவன். அவனது sound mixing எப்போதும் எனக்கு இசையமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்களிலுள்ள நேர்த்தியை ஞாபகமூட்டும்.

இந்த சம்பவம் அவனது இசை ஆழத்தை ஒரே தடவையில் எனக்கு அறிமுகம் செய்த நிகழ்வு எனலாம். அதன் பின்னர், அவனுடன் செய்துகொண்ட எத்தனையோ Recording நிகழ்வுகள். எல்லாம் பரவசம்.

சாரு இசையமைந்த “லக்ஷ்மி நாதம்” பக்தி பாடல்கள் இசைப்பேழை அண்மையில் வெளியிடப்பட்டது. சாருவின் இசையில் தென்னிந்திய பாடகர்கள் பிரசன்னா, மது பாலகிருஷ்ணன், கிருணஷ்ராஜ் மற்றும் பலர் பாடியது.

சாரு இசையமைத்த பல தாயக பாடல்கள் மற்றும் எழுச்சி பாடல்கள் ஆகியவை இன்றும் மாவீர்ர் நிகழ்வுகளில் மறக்கமால் இடம்பிடிக்கும் இதயத்தை பிழியும் உணர்வுபூர்வமான ராகங்கள்.

பிரான்ஸில் வருடா வருடம் நடைபெறும் குறும்பட போட்டி நிகழ்வில் மூன்று வருடங்கள் தொடர்ச்சிய சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதைப்பெற்றுக்கொண்டவன் சாரு.

இவ்வாறு அவன் இசைப்பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், நாம் இப்படியான – சாரு போன்ற – கலைஞர்களை எவ்வளவுக்கு அங்கீகரித்துள்ளோம். அவன் போன்ற கலைஞர்களை எத்தனை தடவைகள் முன்னிறுத்தியுள்ளோம். அதற்கு எவ்வளவுதூரம் எமது மக்கள் தயாராக உள்ளார்கள்.

இதுவே என் கவலை.

"காற்றுக்கு ஓய்வென்பதேது - அட
கலைக்கொரு தோல்வி கிடையாது"



No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...