Monday, December 15, 2014

"கானல் மேல் காதல்" பாடல் பி(சி)றந்த கதை!


15.2.2013
காரணமே இல்லாத இரவொன்றில் Deyo வீட்டுக்கு சென்றிருந்தபோது, வழமை போலவே,என்னை வைத்து மெலடிகளுடன் விளையாடும் Deyoவின் குசும்பு பரிபாலனமானது. Minor chordசை வைத்து மனதை கிறங்கடிக்கும் ஓருவித ஓசையை மண்டையில் ஆழமாக நுழைத்துவிட்டு, அதில் மெட்டு போடசொல்வது Deluxshion Deyoவின் வழமையான பாணி. அவ்வித்தத்தில் அன்றைய இரவு பிரசவமானதுதான் "கானல் மேல் காதல்" மெட்டு. அன்று இரவு நாம் இருவர் மட்டும்தான் அந்த மெட்டுக்கு ரசிகர்கள்.பிறந்த அந்த மெட்டினை ஆளாளுக்கு வாய்நிறை புகழ்ந்துகொண்டோம். இந்த மெட்டின் மீது அமையப்போகும் பாடல் நிச்சயம் எல்லோர் மனதையும் ஆழமாக சென்று தாக்கும் என்று நாம் இருவரும் தீர்க்கதரிசன தீத்தமாடிவிட்டு பின்னிரவில் கடையை மூடிக்கொண்டோம். பதிவு செய்த மெட்டை bounce பண்ணி எனது மெயிலுக்கு அனுப்பினான் Deyo. அதன் பிறகு இருவரும் - என்ன காரணத்தினாலோ தெரியவில்லை - ஆளாளுக்கு பிஸியாகிவிட, அந்த மெட்டு உத்தியோகப்பற்ற அநாதையாக மின்னஞ்சலில் அமைதியாக சமாதியாகிக்கிடந்தது.

19.11.2014
மீண்டும் ஒரு காரணமில்லாத இசை இரவு. இருவரும் பல மாதங்கள் கழித்து சந்தித்துக்கொண்டோம். எதேட்சையாக இடறிய சம்பாஷணையொன்றில், நாம் ஈன்ற அந்த பழைய மெட்டு இருவருக்கும் ஞாபகம் வந்தது. Deyo கணனியை தொட, நான் காகிதத்தை தொட, இருவரும் இயந்திரங்களாக இயங்கினோம். நாம் சிருஷ்டிக்கப்போகும் இசை, மனித உணர்வின் சோகமான ஒரு பதிவாக இருக்கப்போகிறது என்பதும், அந்த ஓசை ஒவ்வொருவரினது ஆன்மாவையும் தொட்டுச்செல்லும் பாரம் மிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதிலும் இருவரும் கருத்துடன்பட்டுக்கொண்டோம்.

பாடலின் அடிவேரான மெட்டு தயாராகிவிட்டது. ஆனால், சரியான beat அமையவேண்டுமே. எல்லா பாடல்களிலும் வருவது போன்ற பாணியை பின்பற்றாது, வித்தியாசமாக அமையவேண்டும் என்ற வெறியுடன் Deyo, ஏதேதோ முயற்சிகள் எல்லாம் செய்தான். ஈற்றில், தற்போது நீங்கள் எல்லோரும் கேட்கும் தாளத்துக்கு அண்மித்த ஒரு beat arrangement உடன் "recording போகலாமா" என்றான். எனக்கோ, அது சாடையாக " அழகான ராட்சசியே" பாடல் beatஐ ஞாபகப்படுத்துகிறதே என்ற ஒரு தயக்கம் அடி மனதில் எழுந்தது. அதை Deyoவிடம் கூறியவுடன், தனக்கும் சற்று அந்த feeling வருவதாக கூறிவிட்டு, மீண்டும் beat arrangementக்குள் முக்குளித்து நீராடி, முற்றிலும் மாறுபட்ட rhythm setup உடன் வெளியில் வந்தான்.

இப்போது, நான் பல்லவிக்கு நான் எழுதிய வரிகளை பாடிக்காட்டினேன்.
"ஏதேதோ எண்ணம் நெஞ்சில் எரியும் தீயாய் சுடுகிறதே
காதல் என் இரவினில் நாளும் கனவுகள் எழுதி செல்கிறதே"

"என்னடா! வரிகளில ஒரு புதுமை தெரியிற மாதிரி இல்ல. வார்த்தைகளிலயும் ஒரு பழைய பாட்டு feeling வாற மாதிரி கிடக்கு" எண்டான் Deyo. எனக்கும் பாடிக்காட்டும்போதுதான் சாதுவாக உறைத்தது. அது என்ன எரியும் தீ. தீ என்றாலே எரியுது எண்டுதானே அர்த்தம். எனக்கு ஏதோ முந்தி வித்தி அண்ணா சொன்னதுதான ஞாபகம் வந்தது. "அது என்னடா பேச்சுவார்த்தை? பேச்சு என்றாலே வார்ததைகளின் கோர்வைதானே" எண்டு கூறுவார்.

இனி என்ன செய்யிறது. வார்த்தைகளை செப்பனிடுவம் என்ற எண்ணத்துடன், ரசிகர்களுடன் இலகுவாக relate பண்ணும் விதத்தில் வார்த்தைகளை அடுக்கி,அடுக்கி Deyoவிடம் சமர்ப்பித்தேன். அவனுக்கும் பிடித்துவிட்டது. Recording ஆரம்பமானது.

Smoothஆக சென்ற பல்லவி பரிபூரணமாக,எல்லா இசையமைப்பாளர்களுக்கும் வரும் அந்த சிக்கல் பொய்ன்ட்டுக்கு இருவரும் வந்து சேர்ந்தோம். அதாவது, first interlude. அதாவது, பல்லவி முடிந்து சரணத்துக்கு போகும் முன்னரான இசை. அதை எப்படி arrange பண்ணுவது என்று இருவரும் தனித்தனியே எங்கள் எங்கள் மண்டைகளை சொறிந்துகொண்டிருந்தபோது, "இந்த இடத்தில் நாதஸ்வர ஸ்டைலில் ரசிகர்களின் மைன்டில் ஈஸியாக register ஆகக்கூடிய மெட்டு ஒன்று போட்டால் பிரமாதமாக இருக்கும்" என்று நான் சொல்லி வாய் மூட முன்னரே, கரண்ட் அடிச்சவன் மாதிரி துள்ளிய டியோ "எடடா அந்த கசூவை" என்றான்.

இந்த Kazoo என்பதைப்பற்றிக்கூறுவதானால், அது ஒரு தனிக்கதை.

Kazoo என்பது ஒரு காற்று வாத்தியம். அதை சிம்பிளாக விளங்கப்படுத்துவதானால், நாங்கள் ஊர் திருவிழாக்களில் ஒரு ரூபாவுக்கு வாங்கி ஊதித்திரிந்த அம்மம்மா குழல் என்பது பூவரசம் இலையில் நாங்கள் செய்து பீ பீ ஊதியதன் "நவீன வடிவம்". இந்த Kazoo என்பது அந்த அம்மம்மா குழலில் "நவீன வடிவம்" என்று கூறலாம். அவ்வளவே. மெல்லிய தகரத்தால் செய்த காற்று வாத்தியம். போனமறை Vaanavil நிகழ்ச்சி பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, Arunan தான் இந்த கசூவை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய "வித்தகர்". என்னமோ தெரியவில்லை, எனக்கு அந்த வாத்தியத்தின் மீது ஒரு இனம் புரியாத காதல். நான் அதை எந்த நேரமும் ஊதிக்கொண்டிருப்தை பார்த்து, எங்கள் இசைக்குழுவின் நிவேதா, சுவாதி எல்லாம் "ஐயோ....ப்ளீஸ். உந்த சவுண்ட கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா. நுளம்பு சத்தம் போடுற மாதிரி, பயங்கர annoying தெய்வீகன்" என்று இருவரும் என்னை வறுத்தெடுப்பார்கள்.

"இவர்களது வாய்களை அடைக்குமளவுக்கு இந்த கசூவை வைத்து ஒரு பாட்டு செய்து இவர்களை பழிக்கு பழிக்கு வாங்குவது என்று அப்போதே நினைத்ததேன்" - என்றெல்லாம் நான் பீலா விடப்போவதில்லை. ஏனெனில், வானவில் நிகழச்சி முடிந்த கையோடு, Kazoo எங்கென்றே எனக்கு தெரியாது. பிறகு இன்னொரு நிகழ்ச்சிக்காக அருணனுடன் சேர்ந்து ஒத்திகை பார்த்த கையோடு, என்னை அறியாமலே, அருணனுடைய Kazoo எனது காருக்குள் வந்துவிட்டது. ( அருணன் அவர்களே..வார்தையை வடிவாக கவனிக்கவும் "என்னை அறியாமலே")

இதை அன்றைய இரவுப்பொழுதில், பாடல recording செய்வதற்கு முதல், பேசிக்கொண்டிருந்தபோது Deyo விடம் கூறி, பாடகர் Benny Dayal மேடை நிகழ்ச்சி ஒன்றில் "ஓமண பெண்ணே" பாடலின் தொடக்கத்தை கசூவில் வாசிப்பதை youtube இல் போட்டு பார்த்துக்கொண்டோம்.

Interludeக்கு என்ன செய்யலாம் என்ற தேடலில் நாம் இறங்கியவுடன் சட்டென ஞாபகம் வந்தவனாய், கசூவில் அந்த டியூனை வாசிப்பதாக முடிவு செய்யப்பட்டு, அதை live ஆக வாசித்து reording செய்தாயிற்று. அதற்கு அழகாக string sectionனை mix பண்ணி, அற்புதமான ஒரு interlude ஐ உள்ளங்கையில் அள்ளிக்கொடுத்தான் Deyo. எத்தனை interlude செய்தாலும், இந்த interlude உருவாக்கம் மட்டும் மறக்கமுடியாத அனுபவம். தருணத்தில் கிடைத்த வாத்தியம். அதற்கு ஏற்றாற் போல மெட்டு, இதில் அற்புதமாக வந்து உட்கார்ந்துகொண்ட பாடலின் ஆன்மா. அப்படியொரு, உணர்ச்சிக்குவியலாக அந்த இடையிசை அமைந்தது.

பிறகென்ன, ஏற்கனவே செதுக்கிய சரணத்தின் மெட்டு சாஸ்டாங்கமாக வந்து வீழ, மனதைக்கொள்ளை கொண்ட kazoo interlude இசையே இன்னொரு பரிமாணமாக சரணத்தின் பின்னால் சேர, பாடல் பரவச நிலைக்கே போய்விட்டது.

முன்பெல்லாம், அம்மா இரண்டு அடுப்புகளில் ஒரே நேரத்தில் கறி வைக்கும்போது, mechine போல இயங்கும் அந்த வேகத்தை பார்க்கும்போது, பிரமிப்புடன் கண்வெட்டாது லயித்துக்கிடப்போமே, அது போலத்தான், டியோவின் ஏனைய mixing மற்றும் mastering வேலைகளும் துரித கதியில் நடந்தேறியபோது, மைக்கின் முன்பாக நின்றவாறே பார்த்து ரசித்துக்கொண்டேன். அற்புதமான அனுபவம்.

எல்லாமும் முடிந்த பின்னர். பாடலை தூக்கி நிறுத்துவதற்கு bass guitar இன் சிறு கலவையும், acoustic guitar இன் தூவலும் சேர்த்து இன்னும் ஒரு படி மேலே நகர்த்துவது என Deyo முடிவெடுத்தான். மணித்துளிகள் கரைந்ததே தெரியவில்லை. அப்படியொரு வேகம். ஏற்கனவே எல்லாம் தயாரான பாடலை அன்று இறுதியாக்கும் வேலையில் ஈடுபட்டதுபோல, மெட்டை தவிர எதுவுமே தயாராகாத பாடலை, சீவித்தள்ளி விட்டு அந்த சாமத்தில் "Mc Donalds" போனோம். நாம் எதிர்பார்த்ததைவிட அழகாகவே உருவான பாடலின் இசையை நினைத்து நினைத்து drive thru இல் எமக்கு பரிமாறிய பெண்ணை பார்த்து அநியாயத்திற்கு அதிகாமாகவே இருவரும் சிரித்தோம். அவளும் அப்பாவியாக எமை பார்த்து நகைத்தாள்.

இரண்டு நாட்கள் கழித்து, டியோவின் அழைப்பின் பேரில் வந்த Ashique M. Fahim, பாடலுக்கு bass மற்றும் acoustic பொடிகள் தூவி, பாடலுக்கு இன்னும் அழகு சேர்த்துவிட்டான்.

Recording முடிந்தவுடன், phone பண்ணிய Deyo, "டிசெம்பர் 7 ஆம் திகதி பாட்டை youtube இல் வெளியிடுவம். Lyrics videoவை readyபண்ணவேணும்" என்றான். உடனே நிமாலை அழைத்தேன். பாடல் பற்றி விவரத்தை சொன்னேன். வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று மட்டும்தான் கூறினேன். டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி காலை, தகதகவென அப்படியொரு தரம் மிக்க lyrics videoவை அனுப்பி வைத்தார் Nimal Taz.

Nimal, நாம் எங்கேயோ வைத்து அழகு பார்க்க வேண்டிய அற்புதமான தொழில்நுட்ப கலைஞன். கணினியில் அவர் எத்தனையோ சுவைமிக்க கறிகளை பண்ணக்கூடிய சமையல் கலைஞன். ஆனால், அவரிடம் அநேகமானவர்கள் - அவரது திறமையை பயன்படுத்தாது - சாம்பாரை மட்டும் கேட்டு வாங்கி பரவசப்பட்டுக்கொள்வது துரதிஷ்டவசமானது. ஆனால், "கானல் மேல் காதல்" பாடலுக்கு அவர் புரிந்த நளபாகம் நச்! நச்!

இவர்கள் யாவரதும் உச்சத்திறமைகளின் விளைவுதான், இன்று - 7 நாட்களில் - ஆயிரம் பார்வைகளை தாண்டி நிற்கும் " கானல் மேல் காதல்"


No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...