Wednesday, December 17, 2014

மரணத்தில் பிடியில் திணறிய மார்ட்டின் சதுக்கம்: அந்த 16 மணித்துளிகள்...!!!


பயங்கரவாதம் - வன்முறை - ரத்தம் என்று உலகளாவிய ரீதியில் எந்த செய்திகளுக்குள்ளும் அகப்படாத அமைதி பூமியாக அர்ச்சிக்கப்பட்டுவந்த ஆஸ்திரேலியா, கடந்த டிசெம்பர் 15 ஆம் திகதி சுமார் 16 மணி நேரம் தீவிரவாதத்தின் கைகளில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகையே திரும்பி பார்க்கவைத்துவிட்டது. அகதிகள் பிரச்சினையால் மாத்திரம் அவ்வப்போது உலகத்தின் செய்தித்தாம்பாளத்தின் பிரதான கருப்பொருளாக புரண்டுவந்த ஆஸ்திரேலியா - அதன் வரலாற்றிலேயே - முதல் தடவையாக தீவிரவாதி ஒருவனின் பணயக்கைதி நாடகத்திற்குள் சிக்குண்டு திணறிவிட்டது.

சம்பவம் நடந்த இடம்: சிட்னி மாநகரின் மாட்டின் சதுக்கம்

ஆஸ்திரேலிய தமிழர்களுக்கு மிகவும் பரீச்சயமான இடம். தமிழர்கள் நடத்திய அமைதி ஊர்வலங்கள், மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வுகள் என அனைத்து வெளியரங்க நிகழ்வுகளும் சிட்னி நகரின் மையத்தின் அமைந்துள்ள மார்ட்டின் சதுக்கத்திலேயே இடம்பெற்றிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கனான தமிழ் மக்கள் கூடிய ஆர்ப்பாட்ட பேரணிகளின் இறுதி சங்கமமாக மார்ட்டின் சதுக்கத்தில் - 2009 ஆம் ஆண்டு கால முற்பகுதியில் - பல ஒன்றுகூடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மாட்டின் சதுக்கம் சிட்னி நகரத்தின் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். முக்கியமாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளுக்கு சரியான தெரிவென்றால் சிட்னியில் விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மார்ட்டின் சதுக்கமும் ஒன்று. காரணம், வருடத்துக்கு சுமார் 5.5 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் சன நடமாட்டம் மிக்க மாட்டின் சதுக்க - நிலத்தடி - ரயில்நிலையம் அமைந்த பிரதேசம், ஆஸ்திரேலியாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான "சனல் 7" தலைமையக கட்டடம் அமைந்துள்ள பிரதேசம், ஆஸ்திரேலியாவின் சுமார் மூன்று முன்னணி வங்கிகள் உட்பட முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அமைந்த பிரதேசம், அத்துடன் வானளாவ உயர்ந்து கிடக்கும் அழகான கட்டடங்களுக்கு இடையில் முதலாம் உலகப்போரின் வீரச்சாவடைந்த ஆஸ்திரேலிய மாவீரர்களின் நினைவுத்தூபியும் இங்கு அமைந்துள்ளது. ஆதலால், "சிட்னியின் இதயம்" என்றழைக்கப்படும் மார்ட்டின் சதுக்கத்தை உள்ளுர் - வெளியூர் சுற்றுலா பயணிகளும் விட்டுவைப்பதில்லை.

எந்நேரமும் - தனது எழில் கெடாது - இயந்திரமாக இயங்கிக்கொண்டிருந்த அந்த இடத்தில்தான் அன்றைய தினம் காலன் சற்று காலாற உட்கார்ந்து செல்ல வந்தான்.

காலை 09.45 

எந்நாளும் போலவே பணிநாள் மும்முரத்தில் மார்ட்டின் சதுக்கம் முழ்கிப்போயிருந்த அந்த நேரத்தில், 53 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள லின்ட் சொக்லெட் கபேயினுள், மதத்தின் பெயரால் மதம் பிடித்த மிருகம் ஒன்று தனது தோள் பையினுள் துப்பாக்கியுடன் நுழைந்தது. அடுத்த 16 மணி நேரமும் அந்த அரக்கனின் மரணப்பிடியில் திணறப்போவது - எதுவும் - தெரியாமலே அப்பாவிகளாக அங்கிருந்தவர்கள் கோப்பி அருந்திக்கொண்டிருந்தார்கள். உள்ளே வந்த துப்பாக்கிதாரி, கடையின் பிரதான வாயிலான கண்ணாடியிலான தானியங்கி கதவுக்கான மின் வயரை பிடுங்கிவிட்டு, கடையிலிருந்த அனைவரையும் துப்பாகி முனையில் தரையில் அமருமாறு உத்தரவிட்டான். கடையின் ஜன்னல் கண்ணாடியோரம் சிலரை வரவழைத்து, அரபு மொழியில் துணி ஒன்றில் எழுதப்பட்ட பதாகையை வெளியிலுள்ளவர்களுக்கு தெரியும்படியாக பிடித்துக்கொண்டிருக்குமாறு உத்தரவிட்டான். அதில் "இந்த பூவுலகில் அல்லாவை தவிர வேறெவரும் கடவுள் இல்லை. முகமட் அவரது இறை தூதர்" என்று எழுதப்பட்டிருந்தது. கடையில் வேலை செய்பவர்கள், கோப்பி அருந்த வந்தவர்கள் என 17 பேர் - அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று எதுவும் தெரியாமல் - அந்த மர்ம மனிதனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுக்கொண்டார்கள். அப்போது, கடைக்கு வந்த ஒரு பெண்மணி கதவு திறபடாத கடையினுள் - துப்பாக்கி முனையில் இடம்பெறும் இந்த சம்பவங்களை கண்டுவிட்டு - அலறியடித்துக்கொண்டுபோய் போலீஸிடம் கூற - தொடங்கியது கூத்து. 

மார்ட்டின் சதுக்கத்துக்கு வரும் வீதிகள் உடனடியாக மூடப்பட்டன.

மார்ட்டின் சதுக்கத்தில் உள்ள கட்டடங்களில் பணிபுரியும் அனைவரும் - சனல் 7 தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட - அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

மேலதிக பொலீஸ் படை, சிட்னி மாநிலத்தின் அவசர செயலணியின் சிறப்பு படையினர், அதிரடி படையினர், அம்புலன்ஸ் உத்தியோகத்தர்கள், தீயணைப்பு படையினர் என்று மார்ட்டின் சதுக்கத்தை சூழ்ந்து கொண்டனர்.

"சிட்னியில் துப்பாகிமுனையில் பணையக்கைதிகள்" என்று செய்தி காட்டுத்தீ போல பரவ - ஆஸ்திரேலியா தாண்டி சர்வதேச ஊடகங்களும் செய்தி சங்கை ஊத, உலகின் ஒட்டுமொத்த செய்தி கமராக்களும் மாரட்டின் சதுக்கத்தை நோக்கி திரும்பின.


ஆஸ்திரேலிய காவல்துறையினரும், இப்படியான ஒரு சம்பவத்துக்கு முன்னெப்போதும் முகம்கொடுத்ததில்லை. அதனால், விடயத்தை கையாள்வதில் மிகுந்த நேர்த்தியும் கவனமும் தேவை என்பதில் மிகவும் உறுதியுடன் செயற்ப்பட ஆரம்பத்தினர். அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கடைக்குள் பாய்ந்து துப்பாக்கிதாரியை "போட்டு தள்ளி விட்டு" பணயக்கைதிகளை காப்பாற்றப்போகிறோம் என்று, ஹீரோத்தனத்தை காட்டப்போய், அது அங்கு அகப்பட்டுள்ளவர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்று சிரத்தையுடன், படிப்படியாக காய்களை நகர்த்தை ஆரம்பித்தனர். அவர்களது நடவடிக்கையின் பிரகாரம், சில மணி நேரங்களிலேயே, துப்பாகிதாரி யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அடுத்து, சிட்னியிலுள்ள முஸ்லிம் சமூகத்தலைவர்கள் மற்றும் பேச்சுவார்ததையாளர்களை அழைத்து துப்பாக்கிதாரியுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. துப்பாக்கிதாரியின் நோக்கம், நிபந்தனை போன்றவற்றை அறியும் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

ஆனால், மறுபுறத்தில் கடையினுள் தான் பிடித்துவைத்திருந்த பணயக்கைதிகளிடம் ஊடகங்களை தொலைபேசியில் அழைத்து தனது நிபந்தனைகளை தெரிவிக்குமாறு துப்பாகிதாரி உத்தரவிட்டான். அதன் பிரகாரம், துப்பாக்கிதாரி முனவைத்த கோரிக்கைகள் - 

1) கடைக்கு உடனடியாக இஸ்லாமிய தனிநாட்டு கொடி ஒன்றை அனுப்பவேண்டும்.
2) ஆஸ்திரேலிய பிரதமருடன் தான் நேரடியாக பேசவேண்டும். 

துப்பாக்கிதாரியின் கோரிக்கைகளை அடியோடு நிராகரித்த பொலீஸார், அவனின் நிபந்தனைகளை செய்தியாக வெளியிடவேண்டாம் என்றும் சகல ஊடகங்களுக்கும் கடுமையாக உத்தரவிட்டனர். பணயக்கைதிகளை பிடித்துவைத்திருந்து தனக்கும் தனது நோக்கத்துக்கும் பிரபலத்தை தேடுவதே துப்பாக்கிதாரியின் நோக்கம் என்பதை பொலீஸார் கண்டுகொண்டதால், அந்த நோக்கத்தை நிறைவேற்றவிடாமலும் பொதுமக்களை குழப்பமடைவதை தடுக்கும் நோக்கத்திலும் பொலீஸார் ஊடகங்களுடன் இணைந்து தமது நடவடிக்கைகளை முன்னகர்த்தினர். 

இதற்கிடையில், பிற்பகலளவில் மூன்று பணயக்கைதிகளும், முன்னிரவில் இருவருமாக ஐந்து பேர் துப்பாக்கிதாரியின் பிடியிலிருந்து சாதுரியமாக தப்பியோடிவந்துவிட்டனர். இது மிகப்பெரியளவில் பொலீஸாருக்கு சாதகமாகவும் துப்பாக்கிதாரியின் திட்டத்துக்கு பாதகமாகவும் அமைந்துவிட்டது. தப்பி வந்த ஐவரிடமுமிருந்து கடைக்குள் நடைபெறும் நாடகத்தின் முழு தகவல்களையும் பொலீஸார் பெற்றுக்கொண்டுவிட்டனர். இதனால், கடுங்கோபம் கொண்ட துப்பாக்கிதாரி தன்னிடம் அகப்பட்டுக்கிடக்கும் எஞ்சியுள்ள பணயக்கைதிகளுக்கும் வெளியிலிருந்து தன்னுடன் பேச்சுவார்ததை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் கடுமையான உத்தரவொன்றை பிறப்பித்தான். அதாவது, இனிமேல் யாராவது தனது பிடியிலிருந்து தப்பினால் உள்ளே தனது கட்டுப்பாட்டில் உள்ளவர்களை கொலை செய்யப்போவதாகவும், ஒருவர் தப்பினால் ஒருவரையும் இருவர் தப்பினால் இருவரையும் "போட்டு தள்ளப்போவதாக" கொலை சமன்பாடொன்றை முன்வைத்தான். இது உள்ளிருப்பவர்களுக்குள்ளேயே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. யாரும் தப்பியோடிவிடக்கூடாது என்று வெளியிலிருந்தவர்களை பிரார்த்தித்ததைவிட உள்ளிருந்தவர்கள் ஒவ்வொருத்தரையும் பார்த்து பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


இந்த நாடகம் மணிக்கணக்கில் தொடர்ந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதல் ஆஸ்திரேலியாவின் நேச நாடுகளுக்கு ஆஸ்திரேலிய இராஜாங்க திணைக்களம் இந்த பணயக்கைதிகள் நாடகம் குறித்த செய்திகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உலகத்தலைவர்களும் தங்கள் பங்குக்கு வழமைபோல அறிக்கைகளை விட ஆரம்பித்தனர்.

நடுநிசி கடந்து 2 மணியளவில், பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த கடையினுள் இருந்து ஓரிரு துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. சுற்றிவளைத்துநின்ற பொலீஸார், இதற்கு மேல் தாமதிக்கமுடியாது என்று முடிவெடுத்து ஜன்னால் கண்ணாடிகளை உடைத்துக்குகொண்டு குபு குபுவென உள்ளே பாய்ந்தனர். சரமாரியான வெடிச்சத்தங்கள், மார்ட்டின் சதுக்கத்தின் ஓரு மூலையில் தீப்பந்துகள் வெடித்துப்பறந்தது போல சன்னங்கள் சீறிப்பாய்ந்தன. எல்லாம் ஒரு அரைமணி நேரத்தில் ஓய்ந்துபோனது. பொலீஸாரின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருந்த அம்புலனஸ்கள் மற்று அவசரகால மீட்புப்படையணியினர் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று பணயக்கைதிகளை கடைக்குள்ளிருந்து மீட்டுவந்தனர். மரணத்தின் பிடியிலிருந்து கைத்தாங்கலாக மீட்டுவந்த அனைவரும் உடனடியாக அம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இரவை கிழித்துக்கொண்டு சிட்னி நகர் வீதிகளில் மின்னலென பாய்ந்த அம்புலன்ஸ் வண்டிகள், எவரையும் சாகவிடக்கூடாது என்று உறுதியுடன் உறுமிக்கொண்டு பாய்ந்தன. கடைக்குள் பாய்ந்த பொலீஸாரையும் நடவடிக்கையை நெறிப்படுத்திய முக்கிய அதிகாரிகளையும் தவிர உள்ளே என்ன நடந்தது என்று அப்போது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

மர்மம் துலங்கிய அடுத்தநாள் காலை ரத்தம் சுமந்த செய்திகளுடன் விடிந்தது.

அதாவது, முதல்நாள் இரவு 2 மணியளவில் துப்பாக்கிதாரி அவனது 16 மணிநேர நாடகக்களைப்பில் அவனையறியாமலேயே குட்டித்தூக்கம் ஒன்று போட்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனது கையிலிருந்த துப்பாக்கியை பறிப்பதற்காக கடையின் முதலாளி அவனை நோக்கி பாய்ந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து, சடுதியாக தூக்கத்தால் எழும்பிய துப்பாக்கிதாரி, தன்னை நோக்கி பாய்ந்த கடை முதலாளியை அடித்து விழுத்தி கடுமையை தாக்கி பின்னர் சுட்டுக்கொன்றான். இதை பார்த்து அலறியடித்துக்கொண்டு நாலாபக்கமும் ஓடிய ஏனைய பணயக்கைதிகளை நோக்கி துப்பாக்கிதாரி சரமாரியாக வேட்டுக்களை தீர்க்க, அந்தக்கணம்தான் பொலீஸார் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தனர். உள்ளே வந்த பொலீஸார் வெளிச்சக்குண்டுகளை வீசி உடனடியாகவே துப்பாக்கிதாரியை அடையாளம்கண்டுகொள்ள, அவர்களை நோக்கி தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட துப்பாக்கிதாரியை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர் பொலீஸார். பொலீஸாருக்கும் துப்பாக்கிதாரிக்கும் இடையில் இடம்பெற்ற சில கணநேர துப்பாக்கிச்சண்டையின் இடையில் அகப்பட்டு, இன்னொரு பணயக்கைதியான - மூன்று பிள்ளைகளின் தாயாரும் சட்டவல்லுனருமான - பெண்ணொருவர் கொல்லப்பட்டார். இந்தப்பெண் தனக்குப்பக்கத்திலிருந்த கர்ப்பிணிப்பெண்ணொருவருவரை தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற முற்பட்டபோதே துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைநதார் என்று பொலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யார் இந்த துப்பாக்கிதாரி? இந்த பணயக்கைதிகள் நாடகத்தை அரங்கேற்றியதன் நோக்கம் என்ன?



1964 ஆம் ஆண்டு ஈரானில் பிறந்து 1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த ஹரோன் மொனிஸ் என்ற 50 வயது நபரே இந்த துப்பாக்கிதாரி. ஈரானில் பாதுகாப்பு மற்று புலனாய்வு அமைச்சகத்தில் பணி புரிந்துவிட்டு இஸ்லாமியத்தின் பெயரில் தீவிரவாத சிந்தனைகளுடன் தன்னை ஒரு மதத்தலைவராக தானே பிரகடனம் செய்துகொண்ட மொனிஸ், 1996 ஆம் ஆண்டு தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஈரானில் விட்டுவிட்டு மலேசியா ஊடாக ஆஸ்திரேலியா வந்துள்ளான். இஸ்லாத்தின் பெயரால் ஒரு மதத்தலைவர் போல வேடமிட்டு தீவிரவாத பிரசாரங்களை மேற்கொள்வதில் மும்முரமாக செயற்பட்டுவந்த மொனிஸ், தன்னை சங்கிலியால் விலங்கிட்டு சிட்னி நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியபோது, இவனின் அடையாளம் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. 

2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தடயவியல் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்ட பெண் ஒருவரை மீண்டும் திருமணம் செய்துகொண்ட மொனிஸிற்கு அந்த பெண்மணியின் ஊடாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சிலகாலங்களுக்கு பின்னர், தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாகவும் தொல்லை தருவதாகவும் மொனிஸிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டார் இவரது இரண்டாவது மனைவி. 

குடும்பவாழ்வை பற்றி சற்றும் கவலையடையாது தொடர்ந்தும் தீவிரவாதப்போக்கிலேயே தனது பயணத்தை மேற்கொண்டுவந்த மொனிஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய படையினரின் குடும்பங்களுக்கு அவதூறு கடிதங்களை அனுப்பிய குற்றச்சாட்டில் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 300 மணி நேர சமூக சேவை மற்று இரண்டு வருட நன்னடத்தை பிணையில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார். 

2013 இல், மொனீஸின் - விகாரத்துப்பெற்ற - இரண்டாவது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரிக்கப்பட்டு, கொலையுடன் சம்பந்தப்பட்டமைக்கு நேரடியான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்ட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், மொனீஸ் சிட்னியில் நடத்திய "ஆன்மீக பட்டறையில" சுமார் 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் சேஷ்டைகள் புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர், இந்த மாட்டின் சதுக்க மரண படலம் அரங்கேறியிருக்கிறது. 

தற்போது, பல்வேறு தரப்பிலிருந்தும் அரசாங்கத்தையும் நீதி மற்றும் பாதுகாப்பு தரப்பினரையும் நோக்கி ஊடகங்கள் போர் தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

- இவ்வளவு குற்றச்செயல்களுடன் சுமார் பத்து வருடங்களுக்கு மேல் நடமாடிய குற்றவாளியை பாதுகாப்பு தரப்பு தகுந்த கண்காணிப்பின் கீழ் வைத்திருக்காதது ஏன்?

- 40 க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்று அறிந்தும் நீதிமன்றம் இவரை பிணையில் விடுதலை செய்தது ஏன்?

- சந்தேகப்படும்படியான பட்டியலில் இடம்பெற்றிருக்கக்கூடிய இப்படியான குற்றவாளி துப்பாக்கியை பெற்றுக்கொண்டது எப்படி? 

- நகரின் மத்தியில் ஒரு துப்பாக்கிதாரி 17 பேரை பயணக்கைதிகளாக பிடித்துவைத்திருந்து, அதை முறியடித்ததில் இரண்டு உயிர்களை காவு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில்தான் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை செயல்படுகின்றதானால், அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலை என்ன? 

பதில்கள் இல்லாத கேள்விகளோடு மாட்டின் சதுக்கம் உட்பட ஆஸ்திரேலியாவின் சகல பிரதேசங்களும் மெல்ல மெல்ல வழமை நிலையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...