சிறுவயதிலிருந்து இசைக்கு அடிமையாகி, குறிப்பாக திரையிசைப்போதைக்கு தீராத அடிமையான எனக்கு இமானின் ஆரம்ப காலப்பாடல்கள், அவர் மீது ஒருவித வித்தியாசமான ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தியிருந்தன. ஏனெனில், இரண்டாயிரம் ஆண்டு ஆரம்பகாலப்பகுதியில் திரையிசைக்கு அறிமுகமான இமானின் பாடல்கள் அநேகமானவற்றில் நல்ல மெட்டு இருக்கும்: அநேகமான பாடல்களுக்கு பொருத்தமான குரல்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கும்: ஆனால், ஆர்ப்பரிக்கும் இசைக்கருவிகள் - தேவையற்றமுறையில் பயன்படுத்தப்பட்டு - பாடல்களின் உயிர்ப்பை அவ்வப்போது வெகுவாக பாதிக்கும்: விளைவு - அந்த பாடல்கள் ரசிகர்களிடம் அடையவேண்டிய உண்மையான வீச்சை பெறத்தவறியிருக்கும்.
அத்துடன், இமானின் ஆரம்பகால பாடல்களில் இன்னொரு குறைபாடாக காணப்பட்ட விடயம். அவரது பாடல்கள், mixing & mastering செய்யப்பட்ட விதம். முதலில் குறிப்பிட்டதுபோலவே, ஆர்ப்பரிக்கும் தேவையற்ற இசைக்கருவிகளின் ஆக்கிரமிப்பு அநேக தருணங்களின் பாடகர்களின் குரல்களை விழுங்கிவிடும். அதை நேர்த்தி செய்யக்கூடிய arrangement வாய்ப்பும்கூட அநேக தருணங்களில் தவறவிடப்பட்டிருக்கும்.
ஆனால், இவையெல்லாவற்றையும் தாண்டியும், அவ்வப்போது சில பாடல்கள் இமானின் பெயர் சொல்லும் மெட்டுக்களாக தமிழ் திரையிசைவெளியில் கோலோச்சிக்கொண்டிருக்கத்தவறவில்லை.
குறிப்பிடத்தக்க பாடல்களாக,
"சேனா" படத்தில் "தீராதது காதல் தீராதது"
"விசில்" படத்தில் "அழகிய அசுரா"
"கிரி" படத்தில் "கிசு கிசு மனுசா"
"ஆணை" படத்தில் "அழகிய தரிசனம்"
"நெஞ்சில் ஜில் ஜில்" படத்தில் "கண்ணுக்குள் கலவரம்"
"லீ" படத்தில் "ஒரு களவாணி பயலே"
போன்ற பாடல்களை எனக்கு நெஞ்சு நெருக்கமான மெட்டுக்களாக எப்பொழுதும் முணுமுணுத்துக்கொண்டிருந்துள்ளேன்.
எனது நண்பர் ஒருவர் ஒருமுறை வெள்ளந்தியாக “இந்த இமான் என்றொரு இசையமைப்பாளர் இருக்கிறாரே. அவர் அர்ஜூன் படத்துக்கு மட்டும்தான் இசையமைப்பாரா?” என்று கேட்டார். அவர் கேட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், அர்ஜுன் படத்துக்கு இமான் இசையமைத்தது அதிகம் என்று கூறலாம். "ஆணை", "வாத்தியார்", "சின்னா", "துரை", "மருதமலை" ஆகியவை இதில் அடங்கும்
இப்படி அவ்வப்போது, அதிரடிகளை கொடுத்து தன் இசையை பேசிவந்த இமான், ஒரு சரவெடியாக கிளம்பி, தன் இசையை மற்றவர்கள் பேசவைத்த படமாக மைனாவை கூறலாம். "மைனா" என்பது இயக்குனரின் பிரபுசாலமானின் ஒரு அற்புத திரைக்காவியமாக - யதார்த்த வாழ்வியலின் பிரதிபலிப்பாக - சமானிய ரசிகனின் ரசனையில் ஆழமாக கோடு கீறிச்சென்ற திரைமொழி. அந்த ஆழமான திரைக்கதைக்கு இதமாக இசைவார்த்து திரையில் அந்த படைப்பை இரட்டிப்பாக தூக்கி நிறுத்தியவர் இமான்.
அதன் பிறகு வந்த சில படங்களில், அப்பிடி இப்பிடி இசைக்கபடி ஆடிய இமான், கும்கி, ரம்மி, ஜில்லா போன்ற படங்களில் அடித்த சிக்ஸரில் தொலைந்த கோடான கோடி ரசிகர்களின் இதயப்பந்துகளை இன்னும் தேடிக்கண்டுபிடிக்கவில்லை. அப்பிடி ஒரு இமாலயப்பாய்ச்சல். அத்தனை பாடல்களும் அருமருந்து. ரசிகர்களுக்கு கிடைத்த புதுவிருந்து.
“கூட மேல கூட வச்சு” பாடல் கிட்டத்தட்ட உலக தமிழ் திரையிசை ரசிகர்களின் தேசிய கீதமாகவே முணுமுணுக்கப்பட்டது. 2013 – 2014 ஆம் ஆண்டு இமான் எனும் இசைச்சாகரம் ஏற்படுத்திய அதிர்வு தமிழ் திரையிசை சரித்திரத்திரத்தில் பதிவுசெய்யப்படவேண்டிய சாதனை என்றுகூறினால் மிகையில்லை.
இமானின் இன்னும் சில சைலன்ட் சாதனைகளாக என் நெஞ்சில் அவரை உயரத்தில் வைத்திருக்கும் விடயங்கள் இங்கு கோடிட்டுக்காட்டப்படவேண்டியவை.
2011 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் கதை ஒன்றை மையமாக வைத்து இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எடுத்த திரைப்படம் “உச்சிதனை முகர்ந்தால்” ஈழத்தமிழர் பற்றிய கதை – சோகம் ததும்பும் திரைமொழி, இப்படியான படத்திற்குள் காலைவைத்து ஏன் சர்ச்சைகளை சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்று பல இசையமைப்பாளர்கள் இந்தப்படத்தைவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். பெரிய பெரிய இசையமைப்பாளர்களையெல்லாம் வைத்து படத்தை இயக்குவதற்கு தயாரிப்பு செலவு ஒன்றும் புகழேந்தி தங்கராஜூக்கு அவ்வளவாக உதவிசெய்யவில்லை.
இந்த இடத்தில்தான், அணுகியவுடன் ஆதரவுக்கரம் நீட்டியவர் இமான். ஒரு தமிழனாக தன் கடமையை செய்யவேண்டும் என்ற உணர்வோடு இமான் வடித்த பாடல்கள் “உச்சிதனை முகர்ந்தால்” படத்துக்கு எப்படி அமைந்தன என்பதற்கு, படத்தின் கிளைமக்ஸை பார்ப்பவர்களின் கடைக்கண்ணில் சொட்டும் கண்ணீர்த்துளியே சாட்சி. பலராமும் மாதங்கியும் பாடிய “உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி” வெளிவந்த காலப்பகுதியில் சித்தம் கிறங்கடித்த பாடல் எனலாம். இன்று மீண்டும் கேட்டாலும், ஓடிவந்து இதயத்தில் உட்கார்ந்துகொள்ளும் இதமான மெட்டு.
இதேபோன்ற இமானின் இதயத்தை வருடும் இன்னொரு இசைச்சாதனைதான், கண் பார்வையற்ற – கணீர் குரல் - வைகோம் விஜயலக்ஷ்மியை “என்னமோ ஏதோ” படத்தில் “புதிய உலகில் புதிய உலகில்” என்ற பாடலுக்காக உள்வாங்கியது. அந்த பாடலை அன்றல்ல இன்றல்ல என்று கேட்டாலும் மூளைக்குள் ஏதோ கிறுகிறுக்கும். இதயம் காற்றுவெளியில் எழுந்து பறக்கும். இந்த வாழ்வின் அத்தனை ஆசா பாசங்களையும் துறந்துவிடவேண்டும் என்றொரு அத்வைத நிலைக்குள் அரவணைத்துவிடும். அப்படியொரு இசை. ஆந்த இசையில் அப்படியொரு ஆழம். அப்படியொரு பாரம்.
இவ்வாறான இமானின் இசைப்பயணத்தில் அவர் இணைத்துக்கொள்ளும் புதிய பாடகர் பட்டியலும் அவரது பாடல்கள் தற்போது வெற்றி பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்று கூறலாம். “எயார்டெல் சுப்பர் சிங்கர்” எனப்படும் உலகையே கட்டிப்போட்டுள்ள reality show இலிருந்து இமான் தனது பாடல்களுக்கு பாடகர்களை தெரிவுசெய்வது, அவரது பாடல்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்குவது மட்டுமல்லாமல், எயார்டெல் சுப்பர் சிங்கரில் அந்த பாடகர்களுக்கு உளகளாவிய ரீதியில் உள்ள ரசிகர்களை அப்படியே இமானின் பாடல்களுக்கு இடம்பெயர்த்துவிடுகிறது. இது இமானுக்கும் இந்த பாடர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பரஸ்பர வெற்றியே ஆகும்.
இந்த பட்டியலில், ஹரிஹரசுதன், சாய்சரண், சந்தோஷ், பூஜா, மாளவிகா என்று பலர் அடங்குவர். இதில், என்ன விசேடமெனில், இவர்கள் அனைவருக்கும் மிகக்குறுகிய காலத்தில் - அருமையான – முத்துமுத்தான - ஹிட் பாடல்களை கொடுத்து அவர்களது இசைப்பயணத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்திவிட்டிருக்கிறார் இமான். ஹரிஹரசுதனின், “ஊதாக்கலரு ரிப்பன்”, சந்தோஷ் - பூஜா பாடிய “எதுக்காக என்ன நீயும் பார்த்தா” சாய்சரண் - மாளவிகா பாடிய “டங் டங் டக டக டங் டங்” ஆகிய பாடல்கள் அவர்களை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த இசையமைப்பாளர்களிடமும் அவர்களை கொண்டுசேர்த்துவிட்டுள்ளன.
இவ்வாறான இசைச்சாதனைகளுடன் நாளுக்கு நாள் புதிய முயற்சிகளுடன் பயணிக்கும் இமானின் இசை ஊர்வலம் தொடரவேண்டும். மெட்டுக்களில் காதல் கொண்ட இசையமைப்பாளர்கள்தான் நீண்டகாலம் ரசிகர்களின் மனதில் நின்றுநிலைக்க முடியும். இமான் கடந்துவந்த காலப்பகுதி சுலபமானதல்ல. கடந்த 15 வருடங்களில், தமிழ்திரையிசை தளத்தில் எத்தனையோ புதிய புதிய இசையமைப்பாளர், அவர்களின் எத்தனையோ புதிய புதிய முயற்சிகள், புதிய தொழில்நுட்ப அறிமுகங்கள், இவர்கள் எல்லோரையும்விட தொடர்ந்து இசைச்சிங்கங்களாக கோலோச்சும் ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா – யுவன், இப்போது புதிதாக அனிருத் போன்றோரின் அசைக்கமுடியாத மார்க்கெட். அவர்கள் கொடுக்கும் ஹிட் என கழுத்தை இறுக்கும் போட்டிகளுக்கு நடுவில் தன் திறமையாலும் அதன் மேலுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையாலும் தனது இசை சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பி, எல்லா புகழுக்கும் தகுதியான இசை இளவரசனாக ரசிகர்களின் மனதுக்குள் மகுடி வாசிக்கிறார் இமான்.
சுகல இசைககளிலும் தனது படங்களில் புகுந்துவிளையாடும இமான், இதுவரை பாரம்பரிய இசையை மட்டும் அடிப்படையாக எந்தப்பாடல்களையும் உருவாக்கவில்லை என்பது என் மனதில் நெடுநாளாக இருக்கும் ஒரு குறை. (தன்னுடைய பாடல்கள், பிற மொழி பாடல்கள் என்று அங்கு கொத்தி இங்கே வெட்டி இசை கோர்க்கும் ஹரிஸ் ஜெயராஜே அந்நியன் படத்தில் முழுப்பாடல் இல்லாவிட்டாலும் பாடலின் ஆரம்ப இசையாக தனது சாஸ்திரிய இசைஞானத்தை பதிவுசெய்ய முயற்சியாவது பண்ணியிருக்கிறார்) அதை எப்போது இமான் நிறைவேற்றுப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். ஏனெனில், அதற்குரிய சகல ஆற்றலும் தகுதியும் அவருக்கு நிறையவே உள்ளது. அதை வித்தியாசமாக தரக்கூடிய படைப்பாற்றலும் அவருக்குண்டு.
அதுவரை, ஷ்ரேயா கோஷலின் “கயல்” பாடலுக்கு மீண்டும் செல்கிறேன்.
“என் ஆளை பார்க்கப்போறன்”
No comments:
Post a Comment