Thursday, November 6, 2014

நந்திக்கடல் நண்டு

ஆடு, மாடு, பன்றி போன்ற பெரும் மாமிசங்களை அறவே உண்ணாத எனக்கு கடலுணவுகளில் எப்போதுமே அலாதி பிரியம். அவற்றை யார் சமைத்தாலும் அவை சமைக்கப்படும் வித்தியாசங்களை ஏகாந்தமாக ரசித்து உண்வதில் உள்ள இன்பமே தனி. அந்த வகையில் சிறுவயதிலிருந்தே இறாலுக்கு அடிமையான எனக்கு நண்டு என்றால் அதை சொல்லும்போதே வாயூறும். அதை உடைத்து உண்ணுவதற்கு பொறுமையில்லாமல் சிரமப்பட்ட சிறுவயதில் பக்குவமாக உடைத்து சதையை தனியாக கோப்பையில் போட்டுவிடும் அம்மா, நண்டுக்காலை உடைத்து அதை 'ஐஸ் கிறீம்' என்று ஊட்டிவிட்ட காலங்கள் இன்னமும் மனதில் பசுமையாக உள்ளன.
எனக்கும் கடலுணவுகளுக்குமான சகவாசம் இவ்வாறான ஒரு நெருக்கத்தில் இருக்க, கடந்த வாரம் நண்பன் ஒருவன் கேட்ட கடலுணவினால் நான் பட்ட பாடு எனது இத்தனை வருட 'சாப்பாட்டு வாழ்க்கையில்' பெரிய பங்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதாவது, சந்தைக்கு சென்று நந்திக்கடல் நண்டு என்ற ஒருவகை நண்டினத்தை வாங்கிவரச்சொன்னதே இந்த சிக்கலுக்கு காரணம். அவன் என்னை முதலில் கேட்டபோது ஏதோ கவிதை தலைப்புப்போல இருந்ததால் பேசாமல் நண்பன் தமிழ்பொடியன் இருக்கிறான்தானே, அவனை அழைத்து கேட்போமே என்று எண்ணிய எனக்கு, அவன் சீரியஸாகவே நந்திக்கடல நண்டு பற்றி விவரணம் ஒன்றைக்கொடுத்தபோது சற்று சினமேறிவிட்டது.
'அட உலகமெல்லாம் பிரபலமான நந்திக்கடலில், இவ்வளவு காலமும் நமக்கு தெரியாமல் ஒரு நண்டுக்குடும்பம் இருந்திருக்கிறதே என்று எண்ணியபோது ஒரு வேதனை, 2009 ஆம் ஆண்டுக்குப்பினர்தான் இந்த நண்டு பிரபலமானதா இல்லை முன்னமே இந்த நண்டு இதே பெயருடன்தான் உலாவியதா என்று எண்ணியபோது அதை விட இன்னும்பெரிய வேதனை, இந்த நண்டைப்போய் ஆஸ்திரேலியாவிலுள்ள சந்தையில் வாங்கி வரச்சொல்கிறானே இதை கறிக்கடையில்போய் எப்படி புரியவைக்கப்போகிறேன் என்று எண்ணியபோது முடியை பிய்த்துக்கொள்ளலாம் போன்ற பயங்கர வேதனை.
உடனயாக பொறிதட்டிய ஆள் எங்கள் Siriharan Kana தான். மஞ்சள்பொடி தொடக்கம் மாலு பணிஸ் வரை நளபாகத்தில் நாட்டியமாடும் இவருக்கு இதெல்லம் வெறும் ஜுஜுபியாக இருக்கும் என்ற புளுகத்தில் அழைத்தேன். 'அண்ணா இந்த நந்திக்கடல் நண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா" என்று கேடடேன். அதற்கு அவர் 'ம்ம்ம்...என்ன புத்தகமோ" என்றார். நான் நந்திக்கடல் நண்டு என்று முதலில் கேள்விப்பட்டபோது கவிதையின் தலைப்பு என்று நினைத்ததுக்கு அவர் எவ்வளவோ பரவாயில்லை என்றே எனக்கு தோன்றியது. இருந்தாலும் அழாதகுறையாக, 'இல்லை அண்ண, இது ஒரு நண்டு வகையினமாம்...." என்று தொடங்கி என்னுடைய பிரச்சினைகளை விளங்கப்படுத்தினேன். அவரும் தன்பங்குக்கும் எங்களது அடுத்த ஆஸ்தான நளபாக மன்னன் Sriganeshwaran Rajaratnam எங்கிருக்கிறார் என்று தேடிப்பிடித்து கேட்டால், அவருக்கும் அதே கதிதான். இதிலென்ன வேடிக்கையென்றால், நாமெல்லாம் பட்ட பாட்டை பார்த்திருந்தால் அந்த நந்திக்கடல் நண்டே கைகொட்டி..ச்சீ...கால்கொட்டி சிரித்திருக்கும்.
இறுதியில், மீண்டும் என்னிடம் நண்டு கேட்ட நண்பனை அழைத்து, "என்டா ராஜா, அந்த நண்டு எப்படிடா இருக்கும்" என்று விலாவாரியா விசாரித்து அங்க லட்சணங்கள் எல்லாவற்றையும் அப்படியோ மனப்பாடம் செய்தபடி சந்தைக்குள் நுளைந்து, ஏதோ அடையாள அணிவகுப்பில் திருடனை பிடிப்பதுபோலவே நண்டுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிகளை தாவி தாவி சென்றேன். இறுதியில், எல்லா நண்டுகளுக்கும் அப்பால் தனியே ஒரு பெட்டியில் நூலால் இழுத்து கால்களை கட்டியபடி மாட்டுச்சாணத்துக்கு கால்முளைத்ததுபோல கரும்பச்சை நிறத்தில் எதோ எனக்காக காத்துக்கிடந்ததுபோல என்னை கண்டதும் கால்களால் திமிறி எழும்புவதற்கு முயற்சித்தபடி 10-15 நண்டுகள் கிடந்தன. ஏதோ ஒரு பக்கத்தால் நுரை தள்ளியது. எனக்கல்ல நண்டுக்கு. ஓரளவுக்கு நான் தேடிவந்த ராசாத்தி இவள்தான் என்று முடிவாயிற்று. என் நண்பன் சொன்ன எல்லா அம்சங்களும் பொருத்தமாக இருந்தன. என்ன..இவையெல்லாம் உயிரோடு இருக்கும் என்றுதான் அவன் சொல்லவில்லை. எச்சிலை கொஞ்சம் விழுங்கியபடி இப்போவாவது இந்த நண்டின் உண்மையான பெயர் என்ன என்று அருகே சென்று அங்கிருந்த அட்டையை வாசித்தேன். அதன் பெயர் Queensland Mud Crab என்று கிடந்தது. 
அந்த நண்டு பற்றி, அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் கேட்போமென்று திரும்பினால், அந்தாளுக்கு இரண்டு கண்களையும் காணோம். என்னடா இந்த நண்டுதான் புடுங்கி தின்றுவிட்டதோ என்று அவரை அருகில் சென்று அழைத்தால், அவருக்கு மாத்திரமல்ல அந்த சந்தையில் வேலை செய்துகொண்டிருந்த அரைவாசிப்பேருக்கு அந்தளவுதான் கண்கள். (இவ்வளவுக்கு நான் யாரை சொல்கிறேன் என்று மட்டுமல்ல மெல்பேர்ன் வாசிகளுக்கு நான் எந்த சந்தைக்கு போனேன் என்றுகூட விளங்கியிருக்கும்). அந்த அண்ணாச்சி கூறியதன்படி, இந்த நண்டு உயிரோடுதானிருக்குமாம். உடைக்கும்போதுதான் சாகுமாம். உடைக்கும் முன் செத்தாலும் ஓரிரு மணிநேரத்தில் சமைத்துவிடவேண்டுமாம். இல்லாவிட்டால், அவை இறந்தவுடன் சதைகள் அனைத்து கரைந்து ஒழுகிவிடுமாம். அதற்குப்பிறகு, அம்மா எனக்கு உடைத்து தந்த சதையும் இருக்காது, ஐஸ்கிறீமும் இருக்காதாம்.
அவர் கூறியதெல்லாம் சரி. ஆனால், இந்த உயிர் நண்டை வாங்கிக்கொண்டு வீடு போவதற்குள் எனக்கு ஈரக்குலை கரைந்து உருகிஓடிவிடும் போல கிடந்தது. ஆழ்ந்து யோசித்துவிட்டு, நந்திக்கடல் என்றாலே நமக்கு ஆகாதுபோலகிடக்கு, கலியாணமான புதிதில் போயும் போயும் ஒரு நண்டிடம் கடிவாங்கினான் என்று வரலாறு என்னை பழிக்கக்கூடாது என்ற முடிவுடன் கார்ச்சாவியை கையில் எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கிவிட்டேன்.

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...